தவறாக நடந்து கொண்ட ஆணை துரத்தி துரத்தி தாக்கிய ஐடி பெண்... பைக்கை துரத்தி பிடித்து வீரச்செயல்!
தன்னிடம் தவறாக நடந்து கொண்ட ஆணை பெங்களூரை சேர்ந்த பெண் ஒருவர் துரத்தி பிடித்து தாக்கி இருக்கிறார்.
பெங்களூர்: பெங்களூரின் ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் பெண் ஒருவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்ட ஆணை துரத்தி பிடித்து தாக்கி இருக்கிறார். இந்த சம்பவம் நேற்று சரியாக இரவு எட்டு மணிக்கு பெங்களூரின் முக்கிய பகுதி ஒன்றில் நடந்து இருக்கிறது.
அந்த நபரை பிடிப்பதற்காக அந்த பெண் அவர்கள் சென்ற பைக்கை துரத்திக் கொண்டே வேகமாக சென்று இருக்கிறார். தற்போது அந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் ஒருவர் மட்டும் அந்த பெண்ணிடம் இருந்து தப்பிவிட்டார். தற்போது போலீசார் அவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பொது இடத்தில் நடந்த கொடுமை
பெங்களூரின் முக்கிய ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கும் பெண் ஒருவர் நேற்று தனது தோழிக்காக 'எச்.எஸ்.ஆர் லேஅவுட்' என்ற முக்கியமான பகுதி ஒன்றில் காத்து நின்று இருக்கிறார். சரியாக எட்டு மணி இருக்கும் போது அங்கு இரண்டு நபர்கள் பைக்கில் வேகமாக வந்து அந்த பெண்ணிடம் பேசி இருக்கிறார்கள். மேலும் அவர்கள் இருவரும் அந்த பெண்ணிடம் அதே இடத்தில் பலருக்கும் முன்னிலையில் தவறாக நடக்க முயற்சி செய்து இருக்கின்றனர்.
கண்டுகொள்ளாத மக்கள்
அந்த பெண்ணுரிடம் இரண்டு நபர்கள் தவறாக நடந்து கொள்வதை பார்த்தும் யாரும் அங்கு கேள்வி கேட்காமல் இருந்துள்ளனர். இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அவர்கள் அந்த பெண்ணை பாலியல் ரீதியாக சீண்டி இருக்கின்றனர். மேலும் யாரும் எதுவும் கேள்வி கேட்காததால் உடனே பைக்கை எடுத்துவிட்டு வேகமாக சென்று உள்ளனர்.
பைக்கை முந்தினார்
இதையடுத்து பாதிக்கப்பட்ட அந்த பெண் உடனடியாக அந்த நபர்களை துரத்தி சென்று ஓடியிருக்கிறார். அவர்கள் பைக்கில் சென்றாலும் இவர் வேகமாக சென்று அவர்களை மடக்கி பிடித்து இருக்கிறார். பைக்கின் பின் சீட்டில் இருந்தவரை பிடித்து இழுத்ததில் அவர் கீழே விழுந்துள்ளார். முன் சீட்டில் இருத்தவர் சுதாரித்துக் கொண்டு தப்பி உள்ளார். கீழே விழுந்த நபரை அந்தப் பெண் சரமாரியாக தாக்கி இருக்கிறார்.
இரண்டாவது நபருக்கு வலைவீச்சு
இந்த நிலையில் அந்த நபரை 'எச்.எஸ்.ஆர் லேஅவுட்' போலீஸ் நிலையத்தில் அந்த பெண் ஒப்படைத்து இருக்கிறார். மேலும் முன் சீட்டில் இருந்த நபரின் அடையாளத்தையும் கூறி இருக்கிறார். தற்போது போலீசார் அந்த முன் சீட் நபரை தேடி வருகின்றனர். இது குறித்து அந்த பெண் கூறும் போது ''நான் பெங்களூரில் இரண்டு வருடமாக இருக்கிறேன். எனக்கு முதல் முறை இப்போதுதான் இப்படி ஒரு பிரச்சனை நடந்து இருக்கிறது. நான் எப்போதும் எதற்கும் பயப்பட மாட்டேன். அதனால்தான் துணிந்து அவர்களை துரத்தினேன்'' என்று கூறியுள்ளார்.