"முதல்வர் போஸ்டர் கிழிப்பு.." நாயை பிடிச்சு ஜெயில்ல போடுங்க சார்! சீரியசாக புகார் கொடுத்த தொண்டர்கள்
விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டியை அவமதித்துவிட்டதாக நாய் மீது வினோதமான புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.
பிராந்திய கட்சிகளில் எப்போதும் கட்சியின் தலைவர் தான் முதல்வர் போன்ற டாப் பதவிகளில் இருப்பார்கள். அரசு, கட்சி என்று இரண்டையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக இதைச் செய்வார்கள்.

இதனால் கட்சித் தலைமையிடம் அதாவது சிஎம்-இடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று நிர்வாகிகள் பல செயல்களைச் செய்வார்கள். ஆனால், அவர்கள் செய்யும் சில காரியங்கள் காமெடியில் முடிந்துவிடும். இது கட்சியையே தர்ம சங்கடத்தில் ஆழ்த்திவிடும்.
போஸ்டர் யுத்தம்: பொதுவாக உள்ளூரில் போஸ்டர் யுத்தம் முக்கியமானது. போஸ்டரில் பெயர் இல்லை என்பதற்காக அடிதடியெல்லாம் நடந்திருக்கிறது. அனுமதி இல்லாமல் போஸ்டர் ஒட்டுவது, அவமதிக்கும் வகையில் போஸ்டர் ஓட்டுவது என இதில் பல வழக்குகளும் கூட பறக்கும். அப்படியொரு வினோதமான காமெடியான நிகழ்வு தான் ஆந்திராவில் நடந்துள்ளது. இந்த வினோத சம்பவம் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடந்துள்ளது.
அங்கே ஒரு வீட்டின் சுவரில் ஆந்திர முதல்வரின் போஸ்டரை ஓட்டியிருந்தார்கள். அதே அங்கே சுற்றிக் கொண்டிருந்த நாய் கிழித்துப் போட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாக பெரும் பரபரப்பைக் கிளப்பியது. இதனிடையே பெண் தொண்டர்கள் சிலர் இது குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். முதலில் ஆளும் தரப்பைச் சேர்ந்தவர்கள் புகார் அளித்தாகத் தகவல் வெளியானது.

புகார்: இருப்பினும், அதை அவர்கள் மறுத்துள்ளனர். உண்மையில் அங்கே எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சி தொண்டர் தாசரி உதயஸ்ரீ ஆளும் அரசை நக்கல் செய்யும் வகையில் புகார் அளித்துள்ளார். முதலமைச்சரை அவமதித்த அந்த நாய் மீதும், அதன் பின்னணியில் உள்ளவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் புகார் அளித்துள்ளனர்.
இது குறித்து புகார் அளித்த அந்த பெண் மேலும் கூறுகையில், "151 தொகுதிகளில் வென்று ஆட்சியைப் பிடித்துள்ள ஜெகன் மோகன் ரெட்டி மீது எங்களுக்கு மிகப் பெரிய மரியாதை இருக்கிறது. அப்படிப்பட்ட மக்கள் செல்வாக்கு மிக்க தலைவரை ஒரு நாய் அவமானப்படுத்தியுள்ளது. இது மாநிலத்தின் 6 கோடி மக்களைக் காயப்படுத்தியுள்ளது. எனவே, எங்கள் அன்புக்குரிய முதலமைச்சரை அவமதித்த நாயையும் நாயின் பின்னால் இருந்தவர்களையும் கைது செய்யுமாறு நாங்கள் போலீசாரிடம் புகார் அளித்தோம்" என்று கூறினார்.

வீடியோ: முன்னதாக, ஜெகன் மோகன் ரெட்டியின் புகைப்படம் ஒட்டப்பட்ட ஸ்டிக்கரை நாய் ஒன்று கிழிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகத் தீயாகப் பரவியது. அதாவது ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் ஜெகன் அண்ணா எங்கள் எதிர்காலம் என்ற முழக்கத்துடன் கூடிய ஸ்டிக்கர் அங்கே பல வீடுகளில் ஒட்டப்பட்டு வருகிறது. இதில் ஒன்றைத் தான் அந்த நாய் கிழித்திருந்தது. இதனை எதிர்க்கட்சியாக இருக்கும் பல தெலுங்கு தேச ஆதரவாளர்கள் ஷேர் செய்து டிரெண்டிங் செய்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications