15 வயது மாணவியை பலாத்காரம் செய்த எம்.எல்.ஏ - உடந்தையாக இருந்த சுலேகா தேவி கைது
பாட்னா: பீகாரில் சிறுமி ஒருவரை ஆளும்கட்சி எம்.எல்.ஏ பலாத்காரம் செய்த வழக்கில் அச்சிறுமியை அழைத்து சென்ற பெண்ணான சுலேகா தேவி நாளந்தா போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
மேலும், சிறுமிக்கு மது கொடுத்து ஆபாச படம் காட்டி, கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்த ஆர்.ஜே.டி எம்.எல்.ஏவும், முன்னாள் அமைச்சருமான ராஜ்பல்லப் யாதவ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
பீகாரில் ஐக்கிய ஜனதா தளம், ஆர்.ஜே.டி கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள ஷெரீப் பகுதியைச் சேர்ந்த 15 வயது பள்ளி மாணவியை அவரது பக்கத்து வீட்டுக்கார பெண் சுலேகா தேவி பிறந்த நாள் கொண்டாட்டம் ஒன்றில் பங்கேற்க வரும்படி அழைத்துள்ளார்.
இதை நம்பிய அந்த மாணவி,நான்கு மாடி கட்டடத்துக்கு சென்றார். ஆனால், அங்கு பிறந்த நாள் நிகழ்ச்சி எதுவும் நடக்காததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அப்போது எம்.எல்.ஏ ராஜ்பல்லப், சுலேகா தேவியுடன் அங்கு வந்தார். இருவரும் அந்த மாணவிக்கு வலுக்கட்டாயமாக மதுவை கொடுத்துள்ளனர்.
அப்போது அங்கிருந்து சிறுமி தப்பிச் சென்றுள்ளார். உடனே தன் அடியாட்களை அனுப்பி அந்த சிறுமியை இழுந்து வந்து எம்.எல்.ஏ பாலியல் பலாத்காரம் செய்தார்.
அவரது அடியாட்களும் அந்த சிறுமியை சீரழித்துவிட்டு தப்பி ஓடினர். இந்த சம்பவம் பீகாரில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இச்சம்பவத்திற்கு காரணமான சுலேகா தேவியை போலீசார் கைது செய்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். அவருடன் கூடவே அவருடைய தாயார் ராதா தேவி, மகள் சோட்டி குமாரி, தங்கை துள்சி ஆகியோரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.