வருமான இழப்பு ஏற்பட்டாலும் மதுவிலக்கு கொள்கையில் இருந்து பின்வாங்க மாட்டோம்: உம்மன்சாண்டி உறுதி
திருவனந்தபுரம்: வருமான இழப்பு ஏற்பட்டாலும் கூட மக்களின் நல்வாழ்க்கையை கருத்தில் கொண்டு மதுவிலக்கு கொள்கையிலிருந்து பின்வாங்க மாட்டோம் என கேரள முதல்வர் உம்மன்சாண்டி உறுதி படத் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் படிப்படியாக மது விலக்கை அமல்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதல்கட்டமாக அங்குள்ள 412 மதுக்கடைகள் சமீபத்தில் அதிரடியாக மூடப்பட்டன. தொடர்ந்து படிப்படியாக மதுக்கடைகள் மூடப்படும் என கேரள அரசு தெரிவித்துள்ளது.

மதுவிலக்கால் அரசுக்கு வருமான இழப்பு ஏற்படும் என முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் உட்பட சிலர் கருத்துத் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், நேற்று இது தொடர்பாக செய்தியாளர்கள் முதல்வர் உம்மன்சாண்டியிடன் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அளித்த பதிலாவது:-
மதுக்கடைகளை படிப்படியாக மூடுவது என்ற முடிவை நாங்கள் அவசர கதியில் எடுக்கவில்லை. 5 மாதங்கள் நன்கு ஆலோசித்து தான் இந்த முடிவை எடுத்தோம். இதனால் அரசுக்கு ஏற்படும் ரூ.7 ஆயிரம் கோடி இழப்பை நான் எளிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இருப்பினும் அதை விட சமுதாயத்திற்கு ஏற்படும் இழப்பு அதிகம். மது விலக்கு கொள்கையில் இருந்து நாங்கள் பின் வாங்க மாட்டோம்' என இவ்வாறு அவர் உறுதி படத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications