10 நாளில் அரசு வேலை வேண்டும்... போராட்டத்தில் குதித்த உலகக் கோப்பை வென்ற ஜார்கண்ட் கபடி வீராங்கனை
பொகாரோ: அரசு அளித்த வாக்குறுதியின் படி, அரசு வேலை வழங்காவிட்டால், குடும்பத்துடன் போராட்டத்தில் குதிப்பேன் என எச்சரித்துள்ளார் பெண்கள் கபடியில் உலகக்கோப்பையை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த ஜார்கண்ட் கபடி வீராங்கனையான விந்தியாவாசினி.
கிரிக்கெட் கடவுள் எனப் புகழப்படும் சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கி சிறப்பிக்கப் பட்டு சில நாட்கள் கூட ஆகவில்லை ஆனால், உலகக் கோப்பையை வென்ற கபடி அணியில் விளையாடிய ஜார்கண்ட் வீராங்கனை ஒருவர் தனக்கு உரிய பணி வழங்கவில்லை எனப் போராட்டத்தில் குதித்துள்ளார்.
இந்தியாவில் கிரிக்கெட்டிற்கு வழங்கப் படுகிற அங்கீகாரமும், அந்தஸ்தும் பிற விளையாட்டுகளுக்கு வழங்கப் படுவதில்லை என்ற குற்றச்சாட்டு இன்னமும் நிலவி வருகிறது. அதனை மேலும் உறுதி செய்யும் வகையில் கபடி வீராங்கனை ஒருவர், அரசு தனக்கு வேலை வழங்க வேண்டும் எனக் கூறி நேற்று ஒருநாள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

உலகக் கோப்பை....
கடந்த 2012-ம் ஆண்டு நடந்த பெண்கள் உலகக்கோப்பை கபடி போட்டியில் இந்திய அணி கோப்பையை வென்றது. வெற்றிப்பெற்று இந்தியா திரும்பிய இந்திய அணி வீராங்கணைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அரசு வேலை வாக்குறுதி....
அந்த பெண்கள் கபடி அணியில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த வீராங்கணை விந்தியாவாசினியும் ஒருவர். விந்தியாவாசினியை கவுரவிக்கும் வகையில் அவருக்கு ஆசு வேலை அளிப்பதாக அப்போது முதல்வராக இருந்த அர்ஜூன் முண்டா உறுதியளித்தார்.

ஏமாற்றமே பரிசு....
ஆனால் ஆட்சி மாறியதே தவிர காட்சி மாறவில்லை. அதையடுத்து ஆட்சிக்கு வந்த ஹேமந்த் சோரனும் இரண்டு முறை வேலை கொடுப்பதாக விந்தியாவாசினிக்கு உறுதியளித்தாராம். ஆனால், வேலைக்குப் பதிலாக விந்தியாவாசினிக்கு ஏமாற்றம் மட்டுமே கிடைத்துள்ளது.

ஒருநாள் தர்ணா....
நான்கு சகோதரிகளுடன் மிகவும் ஏழ்மை நிலையில் வாழ்ந்து வரும் விந்தியாவாசினி பொறுமையிழந்து நேற்று வேலை கேட்டு பொகாரோ துணை கமிஷனர் அலுவலகம் முன்பு ஒரு நாள் தர்ணா நடத்தினார்.

குடும்பத்துடன் போராட்டம்....
தனது போராட்டம் குறித்து விந்தியாவாசினி கூறும்போது, ‘சர்வதேச விளையாட்டுகளில் வெற்றி பெறுபவருக்கு அரசு வேலை வழங்கவேண்டும் என்று அரசின் கொள்கை இருக்கிறது. ஆனால், இவர்கள் எனக்கு வேலை தர மறுத்து வருகிறார்கள். அவர்கள் கொடுத்த வாக்குறுதியை இன்னும் 10 நாட்களில் நிறைவேற்றாவிட்டால், எனது குடும்பத்துடன் தலைநகர் ராஞ்சியில் போராட்டம் நடத்துவேன்' எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications