சகிப்பின்மையின் விளைவுகளைத் தான் உலகம் தாங்க முடியாமல் தவிக்கிறது: பிரணாப் வருத்தம்
டெல்லி: சகிப்பின்மைப் பிரச்னையின் கொடூர விளைவுகளைத் தாங்க முடியாமல்தான் இப்போது உலகம் தவித்து வருகிறது. சகிப்பின்மையின் உச்சம்தான் பயங்கரவாத நடவடிக்கைகள் என குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் சர்வதேச இந்தியவியலாளர்களின் முதல் மாநாடு நேற்று தொடங்கியது. மூன்று நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் சீனா, ரஷியா, ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 22 இந்தியவியலாளர்கள் உள்பட வரலாற்றாசிரியர்கள், கல்வியாளர்கள் என பலர் பங்கேற்றனர். மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜும் கலந்து கொண்டார்.

மாநாட்டைத் தொடங்கி வைத்து பிரணாப் முகர்ஜி கூறுகையில், சகிப்பின்மைப் பிரச்னையின் கொடூர விளைவுகளைத் தாங்க முடியாமல்தான் இப்போது உலகம் தவித்து வருகிறது. சகிப்பின்மையின் உச்சம்தான் பயங்கரவாத நடவடிக்கைகள்.
இந்தச் சூழ்நிலையில் இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை கருத்தை உலகுக்கு நாம் எடுத்துச் செல்ல வேண்டும். இந்தியாவுக்கும் கூட இப்போது இக்கருத்து தேவைப்படுகிறது.
உலகில் நடைபெறும் பல மோசமான சம்பவங்களை நாம் மெளன சாட்சியாக கடந்து செல்கிறோம். அப்படி இருக்காமல், மனித நேயத்தையும், நாகரிக சமூகத்தின் நடைமுறைகளையும் நம்மால் முடிந்த அளவுக்கு பரவச் செய்ய வேண்டும். சக மனிதர்களையே வெறுக்கும், மனோபாவம் மாற வேண்டும்.
பன்முகத்தன்மை கொண்ட இந்தியா தொடர்ந்து ஒருங்கிணைப்புடன் இருந்து வருவதற்கு நம்மிடம் தொன்றுதொட்டு இருந்து வரும் சகிப்புத்தன்மைதான் காரணம். அதற்கு கேடு விளைவிக்கும் சம்பவங்கள் நிகழ்ந்தாலும், அதனை நாம் முறியடிக்க வேண்டும்.
இந்தியா மிகச்சிறந்த பாரம்பரியத்தைக் கொண்ட நாடு. அதன் கலை, கலாசாரம், வரலாறு, இலக்கியம், தத்துவத்தில் தேர்ச்சி பெற்ற மேலும் பல இந்தியவியலாளர்கள் உருவாக வேண்டும்.
இந்தியாவின் பராம்பரிய மருத்துவ முறைகளான ஆயுர்வேதம் உள்ளிட்டவற்றிலும், யோகா உள்ளிட்ட கலைகளிலும் இளைய தலைமுறையினர் ஆர்வம் காட்ட வேண்டும் என்று பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications