தொழில் வளர்ச்சியில் பாய்ச்சல்! ரூ.1.11 லட்சம் கோடி முதலீட்டுக்கு ரெடியாகும் உ.பி! யோகி பெருமிதம்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் தொழில் முதலீடுகள் தொடர்ந்து குவிந்து வரும் நிலையில், 10 பெரிய தொழில் நிறுவனங்கள் மாநிலத்தில் தங்கள் யூனிட்களை அமைக்க ரூ.1.11 லட்சம் கோடி முதலீடு செய்ய இருக்கிறார்கள் என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
தொழில்துறையில் புதிய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்று உத்தரப் பிரதேச அரசு தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக இந்த ஆண்டு தொடக்கத்தில் லக்னோவில் நடத்தப்பட்ட முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு பெரிய அளவில் கை கொடுத்தது. இதற்கு முன்னரும் பலமுறை இந்த உச்சி மாநாடுகள் நடத்தப்பட்டிருந்தாலும் அவை அனைத்தும் உத்தரப் பிரதேசத்திற்கு வெளியில்தான் நடத்தப்பட்டிருக்கின்றன. ஆனால் முதல் முறையாக யோகி ஆதித்யநாத் இந்த மாநாட்டை உத்தரப் பிரதேசத்திற்குள் நடத்தி வரலாற்று சாதனையை படைத்தார்.

இந்த மாநாட்டில் ரூ.40 லட்சம் கோடி அளவில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. இந்நிலையில் தற்போது 10 பெரிய தொழில் நிறுவனங்கள் மாநிலத்தில் தங்கள் யூனிட்களை அமைக்க ரூ.1.11 லட்சம் கோடி முதலீடு செய்ய இருக்கிறார்கள் என யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். டேட்டா சென்டர், சில்லறை சந்தைகள், திறன் மேம்பாடு மற்றும் ஆற்றல் போன்ற முக்கிய துறைகளில் இந்த முதலீடுகள் குவிய இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் என யோகி ஆதித்யநாத் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
உத்தரப் பிரதேசத்தின் இலக்கு தற்போது ஒரு ட்ரில்லியன் பொருளாதாரம்தான். எனவே அதற்கு ஏற்ப முதலீடுகளை ஈர்ப்பதிலும், தொழில் வளர்ச்சியை ஊக்குவிப்பதிலும் அம்மாநில அரசு முழு கவனம் செலுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications