சட்டம் ஒழுங்கில் நாங்கள்தான் டாப்! மற்ற மாநிலங்களுக்கும் முன்மாதிரியாக உள்ளோம் என யோகி பெருமிதம்
லக்னோ: உத்தரப் பிரதேசம் சட்ட ஒழுங்கு விஷயத்தில் பல மாநிலங்களுக்கு முன் மாதிரியாக திகழ்வதாக மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், உத்தரப் பிரதேசத்தில் பாஜக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் காவல்துறையில் காலியாக இருந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்து தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி ஆணைகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில இது குறித்து பேசிய அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்,

"உத்தரப் பிரதேச அரசு மக்கள் மத்தியில் பாதுகாப்பு உணர்வை பலப்படுத்தியுள்ளது. புதிய நெடுஞ்சாலைகள் மற்றும் விமான நிலையங்கள் மூலம் மாநிலம் தற்போது புதிய அடையாளத்தை பெற்றிருக்கிறது. மட்டுமல்லாது மாநிலம் அதிக அளவிலான சிறுகுறு தொழில் நிறுவனங்களை பெற்றிருக்கிறது. இந்த தொழில் நிறுவனங்கள் மாநிலத்திற்கு வலுவான அடித்தளத்தை வழங்குகிறது.
மேலும், ஸ்டார்ட் அப் நிறுவனங்களை தொடங்குவதற்கான ஏற்ற சூழலை மாநிலம் வழங்கியுள்ளது. இந்த அளவுக்கு நாட்டில் வேறு எங்கும் சிறப்பான சூழல் அமையவில்லை. ஒரு காலத்தில் உத்தரப் பிரதேசம் மாஃபியா மற்றும் குண்டர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த மாநிலமாக இருந்தது. சட்டம் ஒழுங்கு அந்த அளவுக்கு மோசமாக இருந்தது. ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. பாஜக ஆட்சியின் கீழ் ஏராளமான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
அதேபோல முதலீடுகளும் அதிகரித்துள்ளன. எனவே இதன் காரணமாக உத்தரப் பிரதேசத்தின் பொருளாதார வளர்ச்சி புதிய வேகத்தை எட்டியுள்ளது. காவல்துறையை பொறுத்த அளவில் கடந்த 6 ஆண்டுகளில் சுமார் 1.5 லட்சம் பேர் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளனர். டபுள் என்ஜின் அரசு மூலம் இக்காலக்கட்டத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் உள்கட்டமைப்பு ஆகியே சிறப்பாக மேம்படுத்தப்பட்டுள்ளதால் வாரணாசிக்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகை தர முன்பதிவு செய்துள்ளனர். இது பாஜக அரசுக்கு கிடைத்த வெற்றி" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications