விவசாயிகளின் வாழ்வில் புதிய வெளிச்சம்.. அசத்தி காட்டிய உத்தரப் பிரதேசம்! யோகி ஆதித்யநாத் பெருமிதம்
லக்னோ: புதிய இந்தியாவின் புதிய உத்தரப் பிரதேசத்தில் விவசாயிகள் மதிக்கப்படுகிறார்கள் என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார்.

கடந்த 23ம் தேதி லக்னோவில் கிரிஷக் உபார் யோஜனா திட்டத்தின் கீழ் 51 விவசாயிகளுக்கு இலவச டிராக்டர்களை வழங்கிய யோகி ஆதித்யநாத் புதிய இந்தியாவின் புதிய உத்தரப் பிரதேசத்தில் விவசாயிகள் மதிக்கப்படுகிறார்கள் என்று கூறியுள்ளார். அவர் மேலும் பேசியதாவது, "விவசாயிகளும் அவர்களது முயற்சிகளும் அங்கீகரிக்கப்பட்டு மதிக்கப்படும் மாநிலமாக உத்தரப் பிரதேசம் மாறியிருக்கிறது.
நாங்கள் உத்தரப் பிரதேசத்தை 2027-28 க்குள் டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக மாற்ற முயன்று வருகிறோம். இந்த முயற்சிக்கு வேளாண்துறை மிகப்பெரிய பங்களிப்பை செலுத்தியுள்ளது. விவசாயிகள் உ.பியை கவுரவித்து வருகின்றனர். அவர்களுக்கு நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம். விவசாயிகள் ஏழையாக இருக்கும் வரை இந்தியாவும் ஏழ்மையாகதான் இருக்கும். எனவே இதனை மாற்ற நாங்கள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.
எங்கள் முயற்சிகள் பலன் கொடுத்துள்ளன. மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் உத்தரப் பிரதேசத்தின் விவசாயிகளின் வாழ்வாதாரம் பெருமளவுக்கு வளர்ச்சி கண்டிருக்கிறது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications