அயோத்தியில் 328 அடியில் பிரம்மாண்ட ராமர் சிலை.. உ.பி. அரசு திடீர் திட்டம்!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் அயோத்தியில் மிகவும் பிரம்மாண்டமாக ராமர் சிலை அமைக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் அயோத்தியில் 328 அடிஉயர மிகவும் பிரம்மாண்டமாக ராமர் சிலை அமைக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
அயோத்தியில் உள்ள சரயு ஆற்றங்கரையில் 100 மீட்டர் ஆன ராமர் சிலை அமைக்க முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு உத்தேசித்துள்ளது. இது தொடர்பான திட்ட அறிக்கையை மாநில ஆளுநர் ராம் நாயக்கிடம் சமர்ப்பித்துள்ளது.

மேற்கண்ட தகவலை ஆளுநர் அலுவலகம் செய்திக்குறிப்பின் மூலம் உறுதி செய்துள்ளது. மாநிலத்தில் வழிபாட்டு தலங்களை சுற்றுலா தலமாக்கும் முயற்சியாக மாநில அரசு இதுபோன்ற திட்டத்தை உத்தேசித்துள்ளது.
முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு பொறுப்பேற்று 6 மாதங்கள் நிறைவுற்றதை தொடர்ந்து கையேடு ஒன்று கடந்த சில நாள்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.
அந்த கையேட்டில் சுற்றுலாத் துறை தொடர்பான பட்டியலில் இருந்து உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் நீக்கப்பட்டிருந்தது. இது கடும் விமர்சனங்களுக்குள்ளானது. ஆனால் அதேவேளையில் அந்த புத்தகத்தில் ராமாயணம் தொடர்பான இடங்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் குறித்து இடம்பெற்றிருந்தன.
இதுகுறித்து மாநில அரசு விளக்கமளிக்கையில் தாஜ்மகாலை வேண்டுமென்றே அப்பட்டியலில் இருந்து நீக்கவில்லை. தற்போது ஆட்சியால் செய்து முடிக்கப்பட்ட திட்டப்பணிகளை கருத்தில் கொண்டே அந்த கையேடு வெளியிடப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அயோத்தியில் 328 அடி உயரத்திலான ராமர் சிலை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications