கல்லூரியில் வெடிகுண்டு பீதி கிளப்பிய வாலிபர் கைது: கொலை செய்ததாகவும் ஒப்புதல்
திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருகே கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையிலுள்ள 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு நேற்று இரவு 7 மணி அளவில் போனில் பேசிய மர்ம நபர் திருச்செந்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் நள்ளிரவில் குண்டு வெடிக்கும் என தெரிவித்து விட்டு போனை துண்டித்தார்.
இதையடுத்து திருச்செந்தூர் டிஎஸ்பி கோவிந்தராஜ், சப் இன்ஸ்பெக்டர்கள் தனிஷ்லால், பாண்டி, சிவசண்முகம், சிறப்பு எஸ்ஐ வைரவன் மற்றும் போலீசார், வெடிகுண்டு தடுப்பு பிரிவினர், கைரேகை நிபுணர்கள், உளவுத்துறையினர் நள்ளிரவில் தனியார் கல்லூரிக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.
இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர், இதில் திருச்செந்தூர் அருகே உள்ள நடுநாலுமூலை கிணறு கிராமத்தில் உள்ள செல்போன் கோபுரத்தில் இருந்து அழைப்பு போனது கண்டுபிடிக்கப்பட்டது.
கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த திருச்செந்தூர் அருகே உள்ள ராணிமகாராஜபுரத்தை சேர்ந்த காந்தி மகன் பாலமுருகன், இவரது நண்பர் பொன்பாண்டி மகன் கதிரேசன் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் திருநெல்வேலி -திருச்செந்தூர் மெயின் ரோட்டிலிருந்து ராணிமகாராஜபுரம் செல்லும் பாதையில் நின்ற பாலமுருகனை தனிப்படையினர் கைது செய்தனர். இவரிடம் நடத்திய விசாரணையில் திருச்செந்தூர் அருகே உள்ள ராணிமகாராஜபுரத்தை சேர்ந்த பூக்கடை ஊழியரான முருகானந்தம் என்பவரை கொலை செய்ததாக போலீசாரிடம் பாலமுருகன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவரிடம் தீவிர விசாரணை நடக்கிறது. தொடர்ந்து தலைமறைவாக உள்ள கதிரேசனை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்திற்குப் பின்னர் வெடிகுண்டு பீதி கிளப்புபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications