ஆற்றில் குளித்ததால் பாதிப்பு.. மூளையை தின்னும் அமீபாவால் தாக்கப்பட்ட அமெரிக்கச் சிறுமி பரிதாபப் பலி!
நாக்லேரியா பொலேரி அமீபாவால் தாக்கப்பட்ட அமெரிக்கச் சிறுமி சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
டெக்சாஸ்: அமெரிக்காவில் ஆற்றில் நீச்சலடித்த போது நாக்லேரியா பொலேரி அமீபாவால் பாதிக்கப்பட்ட சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்தவர் 10 வயது சிறுமி லில்லி மே அவண்ட். இவர் தனது குடும்பத்துடன் சில தினங்களுக்கு முன்பு பிராசோஸ் ஆற்றுப்படுகைக்கு சுற்றுலா சென்றார்.
லில்லி ஆற்றில் நீச்சலடித்து விளையாடிய போது நாக்லேரியா பொலேரி (Naegleria fowleri) எனும் அமீபாவால் தாக்கப்பட்டார். நல்ல நீரில் இருக்கும் இந்த வகை அமீபாக்கள் நேரடியாக மூளையை தாக்கக் கூடியவை.
இதையடுத்து அந்த சிறுமி போர்ட் வொர்த்தில் உள்ள குக் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த ஒரு வாரமாக அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
பள்ளிக்குப் போகும் வழியில் குடிகாரர்கள் கூட்டம்.. காரணம் மதுக் கடை.. பெண்கள் கொந்தளிப்பு!
இதுகுறித்து லில்லி படித்து வந்த பள்ளி, தனது பேஸ்புக் பக்கத்தில் அறிவித்துள்ளது. லில்லிக்கு இரங்கல் தெரிவித்துள்ள அப்பள்ளி நிர்வாகம், 'லில்லியின் இழப்பு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக’ தெரிவித்துள்ளது. லில்லி ஒரு புத்திசாலி மாணவி மட்டுமல்லாமல், அனைவரிடமும் நட்பாக பழகக் கூடியவர் என்றும் பள்ளி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லில்லியின் மரணத்திற்கு காரணமான கொடிய வகை அமீபா, மூக்கின் வழியாக நமது உடலுக்குள் நுழையக்கூடியது. மூக்கு வழியாக உள்ளே நுழைந்து, ஒருவரின் மூளை திசுக்களை தாக்கி அழிக்கும். அமெரிக்காவில் கடந்த ஒரு வருடத்தில் மட்டும், 34 பேர் இந்த வகை அமீபா தாக்குதலால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.