நள்ளிரவில் சரிந்த வீடுகள்! 7.7 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கத்தால் 11 பேர் பலி.. பாகிஸ்தான் சோகம்
பாகிஸ்தானில் நேற்றிரவு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலடுக்கத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர்
இஸ்லாமாபாத்: ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் மலைத்தொடரில் நேற்றிரவு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் அதனை சுற்றியுள்ள நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நிலநடுக்கத்திற்கு இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுமார் 800 கி.மீ நீளத்திற்கு பரந்து விரிந்துள்ள 'இந்து குஷ்' மலைத்தொடரின் கிழக்குப்பகுதியில், அதாவது ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு உட்பட்ட மலைத்தொடரில் நேற்றிரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் அந்நாட்டில் ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவாகியுள்ளது. அதேபோல பாகிஸ்தானில் 7.7 என்கிற அளவில் பதிவாகியுள்ளது. இதனால் ஏராளமாக வீடுகளில் சரிந்து விழுந்துள்ளன. தற்போது வரை மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

நிலநடுக்கத்தால் வீடுகளை இழந்த மக்களை அந்நாட்டு அரசு முகாம்களில் தங்க வைத்திருக்கிறது. நேற்றிரவு வரை ஓரிருவர் மட்டுமே நிலநடுக்கத்தால் உயிரிழந்திருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், இன்று காலை இந்த எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல சுமார் 50க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளன. குறிப்பாக லாகூர், இஸ்லாமாபாத் ராவல்பிண்டி, குவெட்டா, பெஷாவர், கோஹாட், லக்கி மார்வாட் ஆகி பகுதிகளில் நிலநடுக்கம் பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து அந்நாட்டு சுகாதாரத்துறை மருத்துவமனைகளுக்கு அவசர நிலையை அறிவித்திருக்கிறது. 100க்கும் அதிகமானவர்கள் காயமடைந்திருக்கிறார்கள். மட்டுமல்லாது இடிபாடுகளில் எத்தனை பேர் சிக்கியிருக்கிறார்கள் என்பது குறித்த தகவல்கள் இன்னும் உறுதியாக தெரியாததால் மக்கள் அச்சமடைந்திருக்கிறார்கள். ஏற்கனவே கடந்த ஆண்டு ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளம் காரணமாக பாகிஸ்தானின் கஜானா ஏறத்தாழ முற்றிலுமாக காலியானது. தற்போது அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருப்பதற்கு வெள்ள பாதிப்பு முக்கிய காரணமாகும். இதிலிருந்து தற்போது வரை மீள முடியாமல் தவித்துக்கொண்டிருக்கையில் இப்போது மற்றொரு பேரிடர் ஏற்பட்டிருக்கிறது.
இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை உடனடியாக மீட்க வேண்டும் என்றும், வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தரப்பட வேண்டும் எனவும் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். அதேபோல முகாம்களில் அடிப்படை வசதிகள் போதுமானதாக இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அவர்கள் கூறியிருக்கின்றனர். மீட்புப் பணிகளில் கவனமாக ஈடுபட் வேண்டும் என்று அந்நாட்டு பேரிடர் மீட்பு படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் கூறியிருக்கிறார். இந்த நிலநடுக்கம் இந்தியாவின் வடமாநிலங்களில் நன்றாக உணரப்பட்டுள்ளது. டெல்லி, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம் வரை இந்த நிலநடுக்கத்தை மக்கள் உணர்ந்திருக்கின்றனர்.

இமாச்சலப் பிரதேசத்தில் ரிக்டர் அளவில் 2.8 ஆக இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் இரவு முழுவதும் தங்கியுள்ளனர். இந்தியா மட்டுமல்லாது துர்க்மெனிஸ்தான், கஜகஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், சீனா, ஆப்கானிஸ்தான், கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இருப்பினும் பாகிஸ்தானில்தான் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த பாதிப்புகளை சரிசெய்ய அரபு நாடுகள் நிதியுதவி அளிக்க முன்வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications