சிரியாவில் ரஷ்ய படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் பள்ளி குழந்தைகள் உள்பட 15 பேர் பலி
பெய்ரூட்: சிரியாவில் ரஷ்ய படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் தவறுதலாக ஒரு பள்ளியின் மீது குண்டு விழந்ததில் 12 பள்ளி குழந்தைகள் உள்பட மூவர் பலியாகியுள்ளதாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.
சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத் தலைமையிலான அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் கடந்த 4 ஆண்டுகளாக கடும் சண்டை நடைபெற்று வருகிறது. அதிபர் ஆசாத்தை பதவியில் இருந்து இறக்கும் நோக்கத்தில் அவரது அதிருப்தியாளர்கள் தொடங்கிய போராட்டம், உள்நாட்டுப் போராக வெடித்து தொடர்ந்து கடும் சண்டை நடைபெற்று வருகிறது.
சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழித்துக்கட்டும் நோக்கத்தில் ரஷ்ய படைகள் களத்தில் இறங்கி கடும் வான்வழி தாக்குதலை நடத்திவருகிறது. இந்நிலையில், கடந்த இரு தினங்களாக ரஷ்ய படைகள் தீவிர வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதில், தீவிரவாதிகளுடன் பல அப்பாவி பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் நேற்று அலெப்போ மாகாணத்தின் அஞ்சாரா நகர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு பள்ளி மீது குண்டு விழுந்து வெடித்தது. இதில், பள்ளியில் இருந்த ஆசிரியர்கள் உள்பட 12 குழந்தைகள் பலியானதாக சிரியாவின் மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இதுதவிர குழந்தைகள், ஆசிரியர்கள் என 20 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வடக்கு மாகாணத்தில் அரசுப் படைகளுக்கும் புரட்சிப் படைகளுக்குமிடையே நேற்று முதல் கடுமையான விமான தாக்குதல்களும், நேரடி தாக்குதல்களும் நடைபெற்றன. இதில், அரசு கட்டுப்பாட்டில் உள்ள அலெப்போவில் ராக்கெட் தாக்குதலில் 3 குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு குழு தகவலின்படி, கடந்த மூன்று மாதங்களில் ரஷ்ய வான்வழித் தாக்குதலில் 2371 பேர் கொல்லப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், 180 குழந்தைகள் உள்பட 792 பொதுமக்கள் பலியாகியுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஐ.எஸ். தீவிரவாதிகள் 655 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் இந்த அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.