மலேசியா: 100 ஆண்டுகளில் இல்லாத வெள்ளம்.. 14 பேர் பலி.. ஆயிரக்கணக்கானோர் ஒரே இடத்தில் தங்க வைப்பு
கோலாம்பூர்: மலேசியாவில் மழை, வெள்ளம் பாதிப்பு காரணமாக 14-க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். ஆயிரக்கணக்கானோர் வேறு இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
பருவநிலை மாற்றம் உலகளவில் மிகப் பெரிய பிரச்சினையாகி வருகிறது. பல நாடுகளில் வரலாறு காணாத வறட்சி, வெள்ளம் ஆகியவற்றுக்கு இந்த பருவநிலை மாறுபாடே காரணம் என சொல்லப்படுகிறது.
அந்த வகையில் தென்கிழக்கு ஆசிய நாடான மலேசியாவில் வரலாறு காணாத அளவுக்கு மழை கொட்டித் தீர்த்தது. இதனால் மக்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறார்கள்.

வழக்கம்
மலேசியாவில் வழக்கமாக அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை பருவமழை காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வழக்கமான ஒன்று. எனினும் மலேசியாவில் தென் சீன கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த 12 ஆம் தேதி முதல் அதிகமான கனமழை பெய்து வருகிறது. இடைவிடாது கொட்டும் பேய் மழையால் 8 மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடு
தலைநகர் கோலாம்பூரில் உள்ள மக்கள் அடர்த்தி அதிகம் உள்ள சிலாங்கூர் மாகாணத்தில் மிகவும் மோசமான நிலை ஏற்பட்டுள்ளது. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. சாலைகள் முழுவதும் மார்பளவு தண்ணீர் தேங்கி நிற்கிறது. 8 மாகாணங்களிலும் நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

ராணுவ வீரர்கள்
அது போல் ஷா ஆலம் நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. ராணுவ வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளார்கள். படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த மழை வெள்ளத்தில் சிக்கி 14 பேர் பலியாகிவிட்டனர். சிலாங்கூர் மாகாணத்தில் மட்டும் 8 பேர் பலியாகிவிட்டனர். 70 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் வேறு இடங்களில் தஞ்சமடைந்துள்ளார்கள்.

கொரோனா பரவல்
அரசு நிவாரண முகாம்களில் மக்கள் குவிந்துள்ளதால் கொரோனா பரவும் அச்சம் எழுந்துள்ளது. மழை, வெள்ளத்தால் பலரை காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. 100 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் இது போன்ற பேய்மழை பெய்யும் என மலேசியா சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள். மீட்பு பணிகளில் தொய்வு ஏற்படுவதாக அந்நாட்டு எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.












Click it and Unblock the Notifications