வங்கதேசத்தின் ரோஹிங்கியா அகதிகள் முகாமில் மிக கொடூரமான தீ விபத்து.. 15 பேர் மரணம், பலர் படுகாயம்
டாக்கா: வங்கதேசத்தின் காக்ஸ் பஜாரில் உள்ள ரோஹிங்கியா அகதிகள் முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 15 பேர் இறந்துள்ளனர் என்றும் 400 பேரின் நிலைமை என்னவென்று தெரியவில்லை என்றும் ஐக்கிய நாடுகள் சபை கவலை தெரிவித்துள்ளது.
வங்கதேசத்தின் காக்ஸ் பஜாரில் உள்ள ரோஹிங்கியா அகதிகள் முகாமில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் இதுவரை 15 பேர் இறந்தனர். 400 பேர் காணாமல் போய் உள்ளனர் என்று ஐநா அமைப்பு கூறியுள்ளது.
வங்கதேசத்தில் உள்ள ஐ.நா. அகதிகள் அமைப்பின் பிரதிநிதி ஜோஹன்னஸ் வான் டெர் கிளாவ் ஜெனீவாவில் செய்தியாளர்களிடம் வீடியோ இணைப்பு மூலம் பேசுகையில். "இந்த தீயில் நாங்கள் பார்த்தது இந்த முகாம்களில் நாம் இதுவரை பார்த்திராத ஒன்று. இது மிகப்பெரியது. இது பேரழிவை ஏற்படுத்தி உள்ளது.
இதுவரை 15 பேர் இறந்துவிட்டார்கள், 560 பேர் காயமடைந்தனர், 400 பேர் இ காணாமல் போயுள்ளனர், குறைந்தது 10,000 தங்குமிடங்கள் தீயில் அழிந்துள்ளன. அதாவது குறைந்தது 45,000 பேர் தீயின் காரணமாக இடம்பெயர்ந்துள்ளனர், அவர்களுக்காக நாங்கள் தற்காலிக தங்குமிடத்தை உருவாக்கி வருகிறோம்" என்றார். இந்த துயரமான தீ விபத்து வங்கசேதத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.