சீனாவில் கனமழை... மண்சரிவில் சிக்கி 17 பேர் மாயம் - ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர்?
பெய்ஜிங்: கனமழை காரணமாக சீனாவில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி மாயமான 17 பேரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
சீனாவின் யுன்னான் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழையின் விளைவாக அங்குள்ள ஷாவா கிராமத்தில் உள்ள நுஜியாங் ஆற்றங்கரையில் இன்று அதிகாலை திடீரென மண்சரிவு ஏற்பட்டது.
திடீரென சகதி மற்றும் பாறைத்துண்டுகள் ஒட்டுமொத்தமாக சரிந்து விழுந்ததில் 17 பேர் உள்ளே சிக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
மண்சரிவு குறித்து தகவல் அறிந்த சுமார் 140 பேர் கொண்ட மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ஒருவர் காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளார். தொடர்ந்து மண்ணில் புதைந்தவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.
மண் சரிவில் சிக்கியவர்களில் சிலர் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.