உக்ரைனில் 2 இந்திய மாணவர்கள் குத்திக்கொலை: ஒருவர் படுகாயம் - 3 பேர் கைது
கீவ்: உக்ரைனில் இந்தியாவை சேர்ந்த 2 மருத்துவ மாணவர்கள் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு மாணவர் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த கொலை தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உக்ரைன் நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள உழ்கோரோட் பகுதியில் உள்ள மருத்துவ கல்லூரியில் இந்தியாவின் உ.பி மாநிலத்தை சேர்ந்த சிலர் மருத்துவ கல்வி பயின்று வருகின்றனர்.

இவர்களில் முசாபர்நகர் மாவட்டத்தை சேர்ந்த ஷைன்டில்யா, காசியாபாத் மாவட்டத்தை சேர்ந்த அன்குர் சிங் ஆகியோரை உக்ரைன் நாட்டை சேர்ந்த சில மர்ம நபர்கள் குத்திக் கொன்று விட்டனர்.
இந்த கத்திக் குத்து சம்பவத்தில் காயமடைந்த இந்திய மருத்துவ மாணவரான இந்திரஜீத் சிங் சவுகான் என்பவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இவர் ஆக்ரா நகர சேர்ந்தவர் என்று உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் மூலமாக டெல்லியில் உள்ள வெளியூறவுத்துறை அமைச்சகத்துக்கு தகவல் வந்துள்ளது.
மூன்று மாணவர்களின் பாஸ்போர்ட், ஆவணங்கள் மற்றும் ரத்தக் கறை படிந்த கத்தி ஆகியவை உக்ரைன் நபர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களிடம் பேசி உள்ளதாக கூறியுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், உடல்களை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளது.
இந்த விவகாரத்தை உக்ரைன் வெளியுறவுத் துறையிடம் எடுத்து சென்றுள்ள இந்திய தூதரகம், இந்திய மாணவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இந்திரஜித் சிங் அளித்த வாக்குமூலத்தின்படி 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications