எங்கு பார்த்தாலும் "டுமீல்": நியூயார்க்கை அதிர வைத்த இரவு.. 2 பேர் பலி.. 14 பேர் படுகாயம்!
நியூயார்க்: அமெரிக்காவுக்கு கட்டம் சரியில்லை போலும். எங்கு பார்த்தாலும் துப்பாக்கிச் சூடாக இருக்கிறது. மிசெளரி மாகாணத்தில் கருப்பர் இன வாலிபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதால் இனக் கலவரம் வெடித்துள்ள நிலையில் நியூயார்க்கில் ஒரே இரவில் பல்வேறு இடங்களில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 பேர் கொல்லப்பட்டனர், 14 பேர் காயமடைந்தனர்.
தெரு முனைச் சண்டைகள், ஹோட்டல் விருந்துகள் என ஒரே நாள் இரவில் நியூயார்க் நகரத்தை உலுக்கியுள்ளன துப்பாக்கிச் சண்டைகள். இந்த சம்பவங்களில் தொடர்புடையவர்கள் அனைவருமே 20களில் உள்ள இளைஞர்கள் என்று கூறப்படுகிறது.
இந்த துப்பாக்கிச் சண்டைகளால் நியூயார்க் நகர போலீஸார் பெரும் தடுமாற்றத்துக்குள்ளாகியுள்ளனர்.

மன்ஹாட்டன்
நடந்த சம்பவங்களில் காயமடைந்த 6 பேர் வடக்கு மன்ஹாட்டன் பகுதியைச் சேர்ந்தவர்கள். இவர்களில் இரு இளைஞர்கள் உயிரிழந்தனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணிக்கு நடந்த சண்டையில் இவர்கள் இறந்துள்ளனர். இவர்களை நோக்கி ஒரு துப்பாக்கி ஏந்திய நபர் சரமாரியாக சுட்டு விட்டு காத்திருந்த காரில் ஏறித் தப்பிப் போய் விட்டார். என்ன சண்டை என்பது தெரியவில்லை.

கிழக்கு ஹார்லம் பூங்காவில் 2 பேர் காயம்
அதேபோல கிழக்கு ஹார்லம் பூங்காவில் நடந்த சண்டையில் 17 மற்றும் 18 வயதுடைய வாலிபர்கள் இருவர் படுகாயமடைந்தனர்.

காதலியைக் குத்தியவரை சுட்ட போலீஸ்
செட்ஜ்விக் அவென்யூ பகுதியில் ஒரு கட்டடத்தில் தனது காதலியுடன் நடந்த சண்டையின்போது பெரிய கத்தியால் அவரை சரமாரியாக குத்தினார் ஒரு வாலிபர். தகவல் அறிந்து வந்த போலீஸார் அந்த நபர் மீது சரமாரியாக சுட்டு காதலியைக் காப்பாற்றினர். படுகாயமடைந்த நிலையில் இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஒரே ராத்திரியில் 14 பேர் காயம்
இப்படி ஒரே ராத்திரியில் நியூயார்க்கின் பல பகுதிகளில் நடந்த சண்டையில் 14 பேர் குண்டுக் காயமடைந்துள்ளனர். மேலும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த காலகட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 10 சதவீதம் அதிகுமாகும்.












Click it and Unblock the Notifications