நிலநடுக்கத்தால் தரைமட்டமான சிரியா..சிறையில் இருந்து தப்பிய 20 ஐஎஸ் பயங்கரவாதிகள்
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட துயரமான சூழ்நிலையைப் பயன்படுத்தி சிரியா சிறையில் இருந்து 20 ஐஎஸ் பயங்கரவாதிகள் தப்பி ஓடியுள்ளனர்.
டமாஸ்கஸ்: சிரியா நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்திற்கு ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த துயரமான நேரத்தில் ஏற்பட்ட குழப்பத்தை பயன்படுத்தி சிறையில் இருந்த 20 ஐஎஸ் பயங்கரவாதிகள் தப்பி ஓடியதாக தகவல் வெளியாகியுள்ளது.
துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் இதுவரை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிரியா நாட்டில் மட்டும் 1500 பேர் உயிரிழந்திருப்பதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகாலை நேரத்தில் 7.8 ரிக்டர் அளவில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு பிற்பகலில் 7.5 ரிக்டர் அளவில் மேலும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. 3வது முறையாக 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் கிரீன்லாந்து வரை உணரப்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. துருக்கியில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் கடந்த 1939-ம் ஆண்டுக்கு பிறகு ஏற்பட்ட மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் இது என்று கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்டுள்ள சேதம் மிகவும் அதிகம் என கூறப்படுகிறது. மத்திய துருக்கி நகரங்களில் இடிபாடுகள் அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நிலநடுக்கத்தால் துருக்கி மற்றும் அண்டை நாடான சிரியாவில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததை தொடர்ந்து மிகப்பெரிய பேரழிவாக அறிவிக்கப்பட்டு 7 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என்று துருக்கி அதிபர் ரெசப் தாயிப் எர்டோகன் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பிப்ரவரி 12ஆம் தேதி வரை துருக்கி மற்றும் வெளிநாட்டு பிரதிநிதி அலுவலகங்களில் துருக்கி தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரியாவில் ஏற்பட்ட துயரமான சம்பவத்தை பயன்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஐஎஸ் பயங்கரவாதிகள் தப்பியுள்ளனர். துருக்கி எல்லையில் ரஜோ நகர சிறையில் 1300 ஐஎஸ் பயங்கரவாதிகள் உள்பட 2000 பேர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர் அவர்களில் 20 பேர் தப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிரியாவில் மீட்புப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தப்பி ஓடிய ஐஎஸ் தீவிரவாதிகளையும் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications