அமெரிக்காவில் கைதான மும்பை தாக்குதல் குற்றவாளி தஹாவூர் ராணா.. இந்தியாவுக்கு நாடுகடத்த ஏற்பாடு
சிகாகோ: 2008ம் ஆண்டு மும்பை தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய தஹாவூர் ராணா அமெரிக்காவிலிருந்து, இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட உள்ளார்.
2008ஆம் ஆண்டு நவம்பர் 26ல், மும்பை நகரத்தில் தாஜ் ஹோட்டல் உட்பட பல இடங்களில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் ஒரே நேரத்தில் கடுமையான தாக்குதலை நடத்தினர்.

இந்த ஈவு இரக்கமற்ற தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். 240க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உலகையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக கனடா நாட்டைச் சேர்ந்த பாகிஸ்தானியரான, தஹாவூர் ராணா அமெரிக்காவின் சிகாகோ நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
அங்கு நடத்தப்பட்ட விசாரணையில், அவருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை கொடுக்கப்பட்டது. 2005ஆம் ஆண்டு நாளிதழ் ஒன்று, முகமது நபியின் கார்ட்டூனை வெளியிட்டதற்காக அதன் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இந்த நிலையில், 10 வருடங்களுக்கு மேலாக லாஸ்ஏஞ்சல்ஸ் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த இவர், மோசமான உடல்நிலை மற்றும் கொரோனா வைரஸ் அறிகுறி காரணமாக விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அதேநேரம், இவரிடம் இந்தியா விசாரணை நடத்த தேவை உள்ளதால், விடுதலை செய்யப்பட்ட அடுத்த இரண்டாவது நாளில் கைது செய்யப்பட்டுள்ளார். இவரும் மும்பை தாக்குதல் குற்றவாளியான டேவிட் கோல்மேன் ஹெட்லி ஆகியோரும் உயர் பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள் என்று கூறப்படுகிறது. விரைவில், தஹாவூர் ராணா இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications