பால்ட்டிமோரில் பல்கலைக்கழகம் அருகே பெண் உள்பட 3 பேர் சுட்டுக் கொலை: போலீஸ் கமிஷனர் டிஸ்மிஸ்
பால்ட்டிமோர்: அமெரிக்காவில் உள்ள பால்ட்டிமோர் நகரில் இருக்கும் மேரிலேண்ட் பல்கலைக்கழகம் அருகே ஒரு பெண் உள்பட 3 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் மேரிலேண்ட் மாநிலத்தில் இருக்கும் பால்ட்டிமோர் நகரில் உள்ளது மேரிலேண்ட் பல்கலைக்கழகம். செவ்வாய்க்கிழமை இரவு பல்கலைக்கழகம் அருகே இரண்டு வாகனங்களில் வந்த 2 பேர் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கிகளை எடுத்து 3 ஆண்கள் மற்றும் ஒரு பெண்ணை நோக்கி சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். குண்டு பாய்ந்தவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். ஒரு பெண் மற்றும் 2 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதில் அந்த பெண் மற்றும் ஒரு ஆண் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தனர்.
இந்த 3 பேரையும் சேர்த்து இந்த ஆண்டு மட்டும் பால்ட்டிமோரில் 154 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு பால்ட்டிமோரில் கொலை சம்பவங்கள் 40 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் 80 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது.
பால்ட்டிமோரில் கொலைகள் அதிகரித்துள்ளதையடுத்து போலீஸ் கமிஷனர் ஆண்டனி பேட்ஸை மேயர் ஸ்டெபனீ ராலிங்ஸ்-பிளேக் புதன்கிழமை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.