3 வயது தங்கையை விளையாட்டுத்தனமாக தலையில் சுட்டுவிட்டு “ஸாரி” கேட்ட 4 வயது சிறுவன்!
லோரைன்: அமெரிக்காவின் ஓஹையோவில் தன்னுடைய 3 வயதான தங்கையை 4 வயது சிறுவன் விளையாட்டுத்தனமாக துப்பாக்கியால் தலையில் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிளீவ்லாந்தில் இருந்து 48 கி.மீ மேற்கில் உள்ள லோரைன் பகுதியில் இருந்த வீடு ஒன்றில் 4 வயது சிறுவனும் அவரது 3 வயது தங்கையும் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது சிறுவனுக்கு கைத்துப்பாக்கி ஒன்று கிடைத்துள்ளது.
இதையடுத்து தனது கையில் சிக்கிய அந்த .40 கேலிபர் கைத்துப்பாக்கியை கொண்டு தங்கையை விளையாட்டாக மிரட்டிய சிறுவன் எதிர்பாராத விதமாக சிறுமியின் தலையில் சுட்டு விட்டான்.
படுகாயமடைந்த சிறுமி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பின்விளைவுகள் தெரியாமல் தங்கையை விளையாட்டாக சுட்ட சிறுவன் அழுதபடியே இருந்ததாகவும், காவல் துறை அதிகாரி ஒருவரிடம் தான் செய்த செயலுக்காக மன்னிப்பு கேட்டதாகவும் போலீஸார் கூறியுள்ளனர்.
அமெரிக்காவில் துப்பாக்கிக் கலாச்சாரம் மிகப் பெரிய அளவில் உள்ளது. வீடுகளிலும் கூட துப்பாக்கிகள் புழக்கம் அதிகம். ஆனால் இந்த துப்பாக்கியால் இன்று விபரீதம் நடந்து ஒரு சிறுமியின் உயிருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.