யு.எஸ் சாலை விபத்தில் சிடிஎஸ் ஊழியர், மனைவி, 2 குழந்தைகள் உள்பட 6 பேர் பலி
ஒக்லஹாமா: அமெரிக்காவில் நடந்த சாலை விபத்தில் 6 இந்தியர்கள் பலியாகியுள்ளனர். அதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும் அடக்கம்.
அமெரிக்காவின் ஒக்லஹோமா மாநிலத்தில் வசித்து வந்தவர் பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தைச் சேர்ந்த பாஸ்கர் ஜா(32). அவரது மனைவி அன்னு ஜா(31). அவர்களுக்கு 3 மற்றும் 1 வயதில் இரண்டு குழந்தைகள்.
கடந்த ஓராண்டாக பாஸ்கர் சிடிஎஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 8ம் தேதி அவர் தனது குடும்பத்தார் மற்றும் அக்னி பால் சிங்(34), மற்றும் ஒரு பெண்ணுடன் மினிவேனில் சென்றுள்ளார்.
வேனை பாஸ்கர் ஓட்டியுள்ளார். மழை பெய்து கொண்டிருந்தபோது பாஸ்கர் வேனை வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார். வேன் சௌடோ அருகே உள்ள மேயஸ் கவுன்ட்டில் இருக்கும் தேசிய நெடுஞ்சாலையில் செல்கையில் கட்டுப்பாட்டை இழந்து டிரக் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் மினிவேனில் இருந்த 6 பேரும் பலியாகினர். அனைவரின் உடல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண் யார் என்று தெரியவில்லை. பாஸ்கர் குடும்பம் பலியான செய்தியை சிடிஎஸ் நிறுவனம் இந்தியாவில் உள்ள அவரது உறவினர்களிடம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் பாஸ்கர் மற்றும் அவரது குடும்பத்தாரின் உடல்கள் இன்னும் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை என்று அவரது சகோதரர் பிரேம் ஷங்கர் ஜா தெரிவித்துள்ளார்.
இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகத்தை அணுகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.