காம்பியாவில் 66 பிஞ்சு குழந்தைகளை கொத்து கொத்தாக பலி கொண்டதா இந்தியாவின் இருமல் டானிக்? WHO விசாரணை
பன்ஜூல்: மேற்கு ஆப்பிரிக்காவின் காம்பியா நாட்டில் 66 பிஞ்சு குழந்தைகள் கொத்து கொத்தாக செத்து மடிய இந்தியாவின் 4 இருமல் டானிக்குகள்தான் காரணம் என குற்றம் சாட்டப்படுவது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு விசாரித்து வருகிறது.
காம்பியாவில் பிஞ்சு குழந்தைகள் அடுத்தடுத்து மரணம் அடைந்ததால் பெரும் பீதி ஏற்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்தியதில் இருமல் டானிக்குகள் குடித்ததால்தான் பிஞ்சு குழந்தைகள் உயிரிழந்தது தெரியவந்தது.

இந்த இருமல் டானிக்குகள் இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் தயாரிக்கப்பட்டவை. ஹரியானாவின் சோனிபட் மெய்டென் நிறுவனத்தால் Maiden Pharmaceuticals Limited தயாரிக்கப்பட்டவை. இந்த 4 டானிக்குகளை குடித்ததால்தான் காம்பியால் சிறுநீரக பாதிப்பு மற்றும் குழந்தைகள் மரணம் நிகழ்ந்துள்ளது என கூறப்பட்டது. இதுவரை 66 குழந்தைகள் இந்த டானிக்குகளை குடித்ததால் உயிரிழந்துள்ளனர்.
இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பான WHO விசாரணை நடத்தி வருகிறது. மேலும் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக் கூடிய இந்த 4 மருந்துகள் தொடர்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருக்கிறது. காம்பியாவில் மட்டும் இல்லாமல் வெளிநாடுகளிலும் இம்மருந்துகள் உயிராபத்துகளை ஏற்படுத்தி இருக்கலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஹரியானா நிறுவனம் தயாரித்த இந்த மருந்துகளில் மனிதர்களால் ஏற்க முடியாத அளவுக்கு வேதிபொருட்கள் கலந்து இருந்ததுதான் உயிரிழப்புகளுக்கு காரணம் எனவும் கூறப்படுகிறது. டை எத்திலீன், எத்திலீன் கிளைக்கால் ஆகியவைதான் மரணத்துக்கு காரணமாக இருக்கக் கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து உலக சுகாதார நிறுவனம் விரைவில் விரிவான தகவல்களை வெளியிடக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications