செளதி மெக்கா மசூதியில் கிரேன் முறிந்து பயங்கர விபத்து: பலி எண்ணிக்கை 107 ஆக உயர்வு.. 238 பேர் காயம்
ரியாத் : செளதி அரேபியாவின் வரலாற்றுப் பழமை வாய்ந்த ஹிஜாஸ் பகுதியில் அமைந்துள்ள இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்காவில் பெரிய மசூதி மீது கிரேன் விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 107 ஆக உயர்ந்துள்ளது. 238 பேர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
செளதி அரேபியாவில் உள்ள புனித நகரான மெக்காவுக்கு ஆண்டுதோறும் உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் ஹஜ் புனித பயணம் செல்வது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஹஜ் யாத்திரை வரும் 24-ந் தேதி தொடங்குகிறது.

இருப்பினும் முன்னதாகவே, பல நாடுகளில் இருந்து முஸ்லிம்கள் மெக்கா நகரில் குவிந்துள்ளனர். வழக்கம்போல் இந்த ஆண்டும் லட்சக்கணக்கானோர் மெக்காவில் உள்ள பெரிய மசூதியில் திரண்டு தங்கள் ஹஜ் கடமையை நிறைவேற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்காக அந்த மசூதியின் கட்டிடத்தை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. அப்பணிக்காக மிகப்பெரிய கிரேன் ஒன்று மசூதி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
மெக்கா நகரில் நேற்று பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் என்று முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்திருந்தது. எதிர்பார்த்தது போலவே நேற்று மாலை பலத்த காற்று வீசியது.
இதைத் தொடர்ந்து பெரிய மசூதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கிரேன், காற்றின் வேகத்தால் திடீரென முறிந்து விழுந்தது. மசூதியின் கூரைப்பகுதியில் பலத்த சத்தத்துடன் விழுந்தது.
அதனால் கூரையின் ஒரு பகுதி உடைந்து விழுந்தது. இதனால் மசூதிக்குள் இருந்த நூற்றுக்கணக்கான ஹஜ் யாத்ரீகர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். இந்த கோர விபத்தில் 107 யாத்ரீகர்கள் பரிதாபமாக பலியானார்கள். 238 பேர் படுகாயம் அடைந்தனர்.
பலியானவர்களின் உடல்கள், ரத்த வெள்ளத்தில் மிதந்தபடி கிடக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின பார்த்தவர்களின் நெஞ்சை உருக்குலைய வைக்கிறது.












Click it and Unblock the Notifications