ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது... உலகமே வியந்து பார்த்த தந்தை, மகள்.. காரணம் தெரியுமா?
கராச்சி: பெண்களுக்கு எதிரான பாலியல் தாக்குதல்கள் தொடர்ந்து அரங்கேறி வரும் நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த பெண்ணின் தந்தை ஒருவர் தனது மகளின் பாதுகாப்புக்காக அவரது தலைமேல் சிசிடிவி கேமரா பொருத்தியுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், குடும்ப வன்முறைகள், தாக்குதல்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. பள்ளி, கல்லூரி, வீடு, பொதுஇடங்கள் என அனைத்துப் பகுதிகளும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத பகுதிகளாக மாறி வருகின்றன. மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

மகாராஷ்டிர மாநிலத்தில் 4 வயதுள்ள இரண்டு சிறுமிகள் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டனர். செவிலியர் ஒருவர் மருத்துவமனையில் வைத்து மருத்துவராலேயே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். கேரளத்தில் மூதாட்டி ஒருவரின் முகத்தில் மிளகாய்ப் பொடியைத் தூவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். வயது வித்தியாசமே இல்லாமல் சிறு குழந்தைகள் முதல் மூதாட்டிகள் வரை பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாகின்றனர்.
பாலியல் பலாத்காரம், கூட்டுப் பாலியல் வன்கொடுமை, பெண்கள் மீதான தாக்குதல் என நாள்தோறும் பெண்களுக்கு எதிரான சம்பவங்களைக் கடந்து சென்று கொண்டுதான் இருக்கிறோம். பெண் குழந்தைகளைப் பெற்ற ஒவ்வொரு பெற்றோரும் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டுதான் உள்ளனர். இந்நிலையில், பாகிஸ்தானில் உள்ள தந்தை ஒருவர் தனது மகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சிசிடிவி கேமராவை தலையில் பொருத்தியுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் உள்ள கராச்சி நகரைச் சேர்ந்த தந்தை ஒருவர் தனது மகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும், கண்காணிப்பதற்காகவும் தனது மகளின் தலையில் சிசிடிவி கேமராவை பொருத்தியுள்ளார். அந்தப் பெண்ணும் தான் எங்கு சென்றாலும் தலையில் சிசிடிவி கேமராவுடனேயே சென்று வருகிறார். இவ்வாறு அப்பெண் தலையில் சிசிடிவியுடன் செல்லும் வீடியோ சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
இதுதொடர்பாக அந்தப் பெண் கூறுகையில், நான் எங்கெல்லாம் போகிறேன், வருகிறேன், என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பதை தெரிந்து கொள்வதற்காக எனது அப்பா என்னுடைய தலையில் சிசிடிவி கேமராவை பொருத்தியுள்ளார். எனது தந்தைதான் என்னுடைய பாதுகாவலர். சிசிடிவி பொருத்தியிருப்பது எனக்கு பாதுகாப்பாகத்தான் உள்ளது.
கராச்சியில் பாலியல் வன்கொடுமைகள், தாக்குதல்கள், கொலைச் சம்பவங்கள் போன்றவை அரங்கேறி வருகின்றன. இதனால், எனது பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் என் தந்தை சிசிடிவி கேமராவை என் தலையில் பொருத்தியிருக்கிறார். இதனைப் பொருத்துவதற்கு நான் என் தந்தையிடம் எந்தவொரு மறுப்பையும் தெரிவிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
தலையில் சிசிடிவி கேமராவுடன் செல்லும் இப்பெண்ணின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தந்தையின் இந்த செயலை குறை சொல்வதற்கில்லை என்று ஒருதரப்பும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் நெட்டிசன்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications