பொதுமக்களின் வீடுகளுக்குள் புகுந்து..கொலைவெறியுடன் தாக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள்! வெளியான ஷாக் வீடியோ
டெல் அவிவ்: ஹமாஸ் படைக்கும்-இஸ்ரேலுக்கும் இடையே மோதல் 10வது நாளாக நீடித்து வரும் நிலையில், இஸ்ரேலியர்களின் வீட்டிற்குள் நுழைந்து ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்தும் வீடியோ ஒன்று சோஷியல் மீடியாக்களில் வேகமாக பரவி வருகிறது.
இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து ஹமாஸ் கிளர்ச்சி குழுக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தை முன்னெடுப்பதும், அதற்கு எதிராக இஸ்ரேல் அதிரடி தாக்குதலை நடத்துவதும் பாலஸ்தீனத்தில் அடிக்கடி நடந்து வரும் சம்பவங்களாகும். ஆனால் கடந்த 2021ம் ஆண்டு அன்று 11 நாள் நடைபெற்ற போருக்கு பின்னர் பாலஸ்தீனத்தில் சற்றே அமைதி நிலவியது. இதனையடுத்து கடந்த 7ம் தேதி இந்த அமைதியை குலைக்கும் வண்ணம் ஹமாஸ், இஸ்ரேல் மீது திடீரென ஏவுகணை தாக்குதலை நடத்தியது.

மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்ரேல்தான் பலமான நாடு என்று சொல்லிக்கொண்டிருந்த நிலையில், இந்த ஏவுகணை தாக்குதல் அந்நாட்டின் ஆத்திரத்தை அதிகமாக தூண்டியது. இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். அதேபோல பாராசூட் மூலம் இஸ்ரேலுக்குள் ஊடுருவிய ஹமாஸ் படையினர் பெண்களையும், குழந்தைகளையும், ராணுவ வீரர்களையும் பிணை கைதிகளாக பிடித்து சென்றனர். இந்த கைதிகளை வைத்துதான் தற்போது இஸ்ரேலுக்கு, ஹமாஸ் போக்கு காட்டி வருகிறது. ஹமாஸின் இந்த பயங்கரவாத தாக்குதலை அமெரிக்கா, பிரிட்டன் தொடங்கி பெரும்பாலான மேற்கு நாடுகள் கண்டித்திருக்கின்றன.
மறுபுறம் இஸ்ரேல், காசா மீது அதிரடி தாக்குதலை தொடுத்திருக்கிறது. கடந்த 9 நாட்களாக வான்வழி தாக்குதலை மேற்கொண்ட இஸ்ரேல் தற்போது தரை வழியாக ஊடுருவி வருகிறது. இதுவரை நடத்தப்பட்ட பதில் தாக்குதலில் தங்கள் நாட்டை சேர்ந்த சில பிணை கைதிகளை மீட்டிருக்கின்றனர். இருப்பினும் இன்னும் அதிகமான பிணை கைதிகளை இஸ்ரேல் மீட்க வேண்டியிருக்கிறது. இந்நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு படையானது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலிய வீடுகளுக்குள் புகுந்து கொலை வெறியுடன் மக்களை தேடும் காட்சிகள் இடம்பிடித்துள்ளன. வீட்டிற்குள் யாரும் இல்லாத நிலையில் மாடியை நோக்கி துப்பாக்கியால் சுடுகின்றனர்.
இந்த வீடியோ எப்போது படம் பிடிக்கப்பட்டது என்பது குறித்த உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. ஆனால் அக்.7ம் தேதியன்று ஹமாஸ் படையினர் பாராசூட் மூலம் இஸ்ரேலுக்குள் நுழைந்தனர். அப்போது துப்பாக்கி முனையில் சிலரை பிணை கைதிகளாக பிடித்து சென்றனர். அந்த சமயத்தில்தான் இந்த தாக்குதல் நடத்திருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த சம்பவத்தின் போது ஹமாஸ் பயங்கரவாதி இஸ்ரேலிய பாதுகாப்பு படையினரால் பிடிபட்டார் என்று இஸ்ரேல் பாதுகாப்புப் படை கூறுகிறது.
Hamas terrorists enter an Israeli family's home pic.twitter.com/1NABRpe267
— Visegrád 24 (@visegrad24) October 15, 2023
வீடியோவில் இரு ஹமாஸ் படையினர் வீடுகளுக்குள் புகுந்து இஸ்ரேலிய மக்களை தேடுகின்றனர். ஆனால் எங்கு தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை. இந்த வீடியோ ஹமாஸ் படையினரின் உடலில் பொருத்தப்பட்டிருந்த கேமிராவில் படம்பிடிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே இதுபோன்று ஹமாஸ் படையினர் இஸ்ரேலை சேர்ந்த பெண்களை பைக்கில் கடத்தி சென்றிருக்கின்றனர். அதேபோல இசை நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த மக்கள் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்தியிருந்தனர். இந்த வீடியோக்கள் முன்னதாக வெளியாகியிருந்த நிலையில் தற்போது இந்த வீடியோ வெளியாகியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications