‘ஆப்கன் மோனலிசா’வின் அடையாள அட்டையை கேன்சல் செய்தது பாகிஸ்தான்!
இஸ்லாமாபாத்: கடும் சர்ச்சைகளுக்குப் பிறகு ‘ஆப்கன் மோனலிசா' ஷர்பத்துக்கு வழங்கிய தேசிய அடையாள அட்டையை ரத்து செய்துள்ளது பாகிஸ்தான்.
கடந்த 1985ம் ஆண்டு நேஷன்ல் ஜியாக்ரபிக் இதழில் இடம் பெற்று பிரபலமானவர் ஷர்பத் குலா என்ற பெண். ஆப்கனில் 80-களில் ஏற்பட்ட தாக்குதலிம்போது பெற்றோரை இழந்த சிறுமி ஷர்பத் அங்கு அமைக்கப்பட்டிருந்த அகதிகள் முகாமில் தங்கியிருந்தார். அப்போது, முகாமில் அவரைக் கண்ட நேஷனல் ஜியாக்ரபிக் இதழின் புகைப்படக்காரர் ஸ்டீவ் எம்.சி.கர்ரி அவரைப் புகைப்படம் எடுத்தார். இந்தப் படம் 1985-ல் நேஷன்ல் ஜியாக்ரபிக் இதழின் அட்டைப்படமாக வெளியிடப்பட்டது.

ஷர்பத்தின் புகைப்படம் ஆப்கன் சூழலை அப்பட்டமாக வெளிப்படுத்துவதாக அமைந்திருந்ததால் மிகவும் பிரபலமானது. மேலும், டாவின்சியின் மோனாலிசா புகைப்படம் வெளிப்படுத்தும் உணர்வுகளோடு ஷர்பத்தின் புகைப்படமும் ஒப்பிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக பச்சை நிறக் கண்களைக் கொண்ட ஷர்பத் 'ஆப்கன் மோனலிஸா' என்ற பெயரைப் பெற்றார்.
ஆப்கன் முகாமில் வாழ்ந்து வந்த அப்பெண், காலப்போக்கில் பாகிஸ்தானுக்கு இடம்பெயர்ந்தார். தற்போது பாகிஸ்தானில் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். தனது பெயரையும் ஷர்பத் பிபி என மாற்றிக் கொண்டிருக்கிறார்.
கிட்டத்தட்ட 17 வருடங்களுக்குப் பிறகு நேஷனல் ஜியாக்ரபி மீண்டும் அவரைக் கண்டுபிடித்துப் புகைப்படம் எடுத்தது. வயதாகிப் போனதால் அவரது இளமையான முகம் மாறி விட்டதாகவும், அவரது தோலின் தன்மை மாறிவிட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால், இன்னமும் அவரது பச்சைக் கண்கள் மட்டும் வசீகரிப்பதாகவும் அதில் தெரிவிக்கப் பட்டிருந்தது.
இந்தப் பேட்டியின் மூலம் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்தார் ஷர்பத். அப்போது, பாகிஸ்தான் நாட்டு மக்களுக்கு மட்டுமே வழங்கப்படும் தேசிய அடையாள அட்டை ஆப்கன் நாட்டைச் சேர்ந்த ஷர்பத்திற்கு வழங்கப்பட்டது கண்டுபிடிக்கப் பட்டது.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையில் சிக்கியதைத் தொடர்ந்து, ஷர்பத்துக்கு தேசிய அடையாள அட்டை வழங்கிய பெஷாவரில் உள்ள ஹயாதாபாத் அலுவலக அதிகாரிகள் 4 பேர் சஸ்பெண்ட் செய்யப் பட்டனர். ஷர்பத்தின் அடையாள அட்டையும் கேன்சல் செய்யப்பட்டது.
இது குறித்து பாகிஸ்தான் அதிகாரிகள் கூறும்போது, "ஷர்பத் பிபி என்றப் பெயரில் பெஷாவர் நகரிலிருந்து தேசிய அடையாள அட்டைக்காக ஷர்பத் குலா விண்ணப்பித்திருக்கிறார். கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட கம்ப்யூட்டர் மூலம் அடையாள அட்டை பெறும் திட்டத்தில் ஆயிரக்கணக்கான ஆப்கானியர்கள் முறைகேடான வகையில் அடையாள அட்டை பெற முயற்சித்தனர். அந்த வகையில்தான் ஷர்பத்தும் தேசிய அடையாள அட்டையை பெற்றிருக்கிறார்" என்றார்.
அடையாள அட்டை விவகாரம் பூதாகரமாக உருவானதை அடுத்து ஷர்பத் தனது குடும்பத்தினருடன் தலைமறைவாகி விட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.












Click it and Unblock the Notifications