காபூலை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து ஆப்கன் எம்பிக்கள் இந்தியாவில் தஞ்சம்
காபூல்: ஆப்கானிஸ்தானை தலிபான்கள் முழுவதும் கைப்பற்றிய நிலையில் அந்நாட்டு அரசியல்வாதிகள் இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறி வரும் நிலையில் கடந்த ஒரு வாரத்தில் இரு மடங்கு வேகத்துடன் நாட்டிற்குள் தலிபான்கள் முன்னேறி வந்தனர். இந்த நிலையில் நேற்றைய தினம் அவர்கள் காபூலுக்குள் நுழைந்தனர்.

பின்னர் காபூலை கைப்பற்றினர். இதையடுத்து அதிபர் அஷ்ரப் கானியை பதவியை விட்டு விலகுமாறு மிரட்டினர். இதையடுத்து அவரும் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு வெளியேறினார். அவர் எங்கிருக்கிறார் என தெரியவில்லை. தஜிகிஸ்தான் சென்றிருக்க கூடும் என தெரிகிறது.
ஆப்கானிஸ்தானின் பெரும்பகுதிகளை தலிபான்கள் கைப்பற்றி வந்த நிலையில் இனி இங்கிருந்தால் பாதுகாப்பு இல்லை என கருதிய அந்நாட்டு அரசியல்வாதிகளும் எம்பிக்களும் கடந்த வெள்ளிக்கிழமை முதல் இந்தியாவில் தஞ்சமடைந்தனர்.
வார்தாக் எம்பி வஹிதுல்லா கலீம்ஸாய், பர்வான் எம்பி அப்துல் அஜீஸ் ஹகிமி, எம்பி அப்துல் குவதீர் ஸஸாய், செனேட்டர் மலீம் லாலா குல், முன்னாள் ஆப்கான் அதிபர் ஹமீத் கர்ஸாயின் உறவினரும் முன்னாள் எம்பியுமான ஜமீல் கர்ஸாய், பாக்லான் எம்பி சுக்ரியா எசாகையில், செனேட்டர் என்ஜினியர் முகமது கான், முன்னாள் நிதியமைச்சர் அப்துல் ஹாதி அர்கண்டிவால், முன்னாள் துணை அதிபர் யூனுஸ் க்வனூனியின் சகோதரர் முகமது ஷரீப் ஷரீபி, எம்பி மரியம் சோலைமான்காலி, ஆப்கானிஸ்தான் மேலவையின் மூத்த ஆலோசகர் குவைஸ் மோவாபாஃக் உள்ளிட்டோர் இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே நூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு நல்லுறவு நீடித்து வருகிறது. தலிபான்களின் கை ஓங்கி வந்த நிலையிலேயே இந்தியா பாதுகாப்பானது, கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு எளிதில் அணுகும் நாடு என்பதால் இங்கு அந்த நாட்டு மக்கள் தஞ்சமடைந்த நிலையில் தற்போது அந்நாட்டு அரசியல்வாதிகளும் இந்தியாவுக்கு அடைக்கலமாக வந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications