கீவ்வில் மண்ணை கவ்விய ரஷ்யா! கோபத்தில் புதின் எடுத்த முக்கிய முடிவு.. ராணுவத்தில் அதிரடி மாற்றம்
மாஸ்கோ: உக்ரைன் போரில் எதிர்பார்த்த முடிவு கிடைக்காததால் கடும் அதிருப்தியில் உள்ள ரஷ்ய அதிபர் புதின், ரஷ்ய ராணுவத்தில் முக்கிய மாற்றம் ஒன்றைச் செய்துள்ளார்.
உக்ரைன் நாட்டின் மீது கடந்த பிப். இறுதியில் ரஷ்யா முழு வீச்சிலான போரை ஆரம்பித்தது. அதன்படி இந்தப் போர் ஒரு மாதத்திற்கு மேலாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்தப் போர் காரணமாக உக்ரைன் மக்கள் சொல்ல முடியாத அளவுக்கு பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர். பல லட்சம் உக்ரைன் மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டும் வெளியேறி உள்ளனர்.

உக்ரைன் போர்
அதேநேரம் இந்த உக்ரைன் போர் ரஷ்யாவுக்கு வெற்றி என்று சொல்லிவிட முடியாது. முதலில் போர் தொடங்கிய சில நாட்களில் உக்ரைன் தோல்வி அடையும் என்றே பலரும் எதிர்பார்த்தனர். இருப்பினும், அந்நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி தொடங்கி கடைசி ராணுவ வீரர் வரை அனைவரும் தாய்நாட்டைக் காக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். ரஷ்யப் படைகளை எதிர்த்து துணிச்சலாகப் போராடிய உக்ரைன் வீரர்கள், பல பகுதிகளில் ரஷ்யாவுக்குப் பதிலடி கொடுத்தனர்.

தலைநகர் கீவ்
குறிப்பாக உக்ரைன் தலைநகர் கீவ்வை கைப்பற்ற ரஷ்யா தொடர்ச்சியாக பல்வேறு முயற்சிகளை எடுத்ததது. பல வாரச் சண்டைக்குப் பின்னரும் கூட ரஷ்யாவால் தலைநகர் கீவ்வை கைப்பற்ற முடியவில்லை. இதையடுத்து கீவ் நகரைச் சுற்றியுள்ள படைகளைக் குறைத்துக் கொள்வதாகவும் ரஷ்யா அறிவித்தது. இது உலகின் மிகவும் வலிமையான ராணுவங்களில் ஒன்றான ரஷ்யாவுக்கு மிகப் பெரிய தோல்வியாகவே பார்க்கப்படுகிறது.

புதிய தளபதி
உக்ரைன் போரில் கிடைத்த முடிவால் ரஷ்ய அதிபர் புதின் கடுங்கோபத்தில் உள்ளார். இந்தச் சூழலில் அதிபர் புதின் ரஷ்ய ராணுவத்தில் முக்கிய மாற்றம் ஒன்றைச் செய்துள்ளார். உக்ரைனில் அந்நாட்டின் படைகளை வழிநடத்த புதிய ஜெனரலை புதின் நியமித்துள்ளார். ரஷ்யாவின் தெற்கு இராணுவ மாவட்டத்தின் தளபதியான அலெக்சாண்டர் ட்வார்னிகோ உக்ரைனில் ரஷ்யாவின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வரும் வாரங்களில் அடைய வேண்டி இலக்குகளைத் தெளிவாகத் திட்டமிட்டு வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

யார் இவர்
மேற்கத்திய நாடுகளால் 'சிரியாவின் கொடூர கொலைகாரன் என்று அழைக்கப்படுபவர் தான் இந்த அலெக்சாண்டர் ட்வார்னிகோ. இவர் கடந்த 1978ஆம் ஆண்டு அப்போதைய சோவியத் ராணுவத்தில் சேர்ந்தார். பிறகு, 1990களில் காவலர் மோட்டார் ரைபிள் பிரிவுகளில் தலைமை ஏற்றார். 2016இல் நடைபெற்ற சிரியா உள்நாட்டுப் போர் சமயத்தில் தான் இவர் உலகெங்கும் பிரபலம் ஆனார். அப்போது சிரிய அரசுக்கு எதிராகப் போராடிய அனைவரும் ஒடுக்க இவர் பேருதவி செய்தார்.












Click it and Unblock the Notifications