ஏர் பிரான்ஸ் விமானத்தில் போலி வெடிகுண்டு- கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் போலீஸ் அதிகாரி
பாரிஸ்: மொரீஷியஸில் இருந்து பாரிஸ் வந்தடைந்த ஏர் பிரான்ஸ் விமானத்தில் போலி வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட விவகாரத்தில் பிரான்ஸை சேர்ந்த முன்னாள் போலீஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
459 பயணிகள் மற்றும் 14 பணியாளர்களுடன் மொரீஷியஸில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை பாரிஸ் நகருக்கு புறப்பட்டு சென்ற விமானத்தில், சந்தேகத்திற்கு இடமான பொருள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அவ்விமானம் கென்யாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

பயணிகளை இறக்கிவிட்ட பிறகு நடத்தப்பட்ட சோதனையில் அந்த மர்மப்பொருள் காகித அட்டை மற்றும் சில காகிதத் தாள்கள் ஆகியவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்டது தெரியவந்தது. இந்நிலையில், விமானத்தில் போலி வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட விவகாரத்தில் அதில் பயணம் செய்த 58 வயது மதிக்கத்தக்க முன்னாள் போலீஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டார்.
பிரான்ஸ் நாட்டில் இந்திய பெருங்கடலை ஒட்டியுள்ள ரியூனியன் பகுதியை சேர்ந்த அந்த நபர், போலீஸ் அதிரடிப்படையில் சில ஆண்டுகள் பணியாற்றியதாக விசாரணையில் தெரியவந்தது. சுமார் 12 மணிநேர விசாரணைக்கு பின்னர் அவர் விடுவிக்கப்பட்டதாக உள்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் சமீபத்தில் நடந்த பாரிஸ் தாக்குதலில் 130 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பிரான்ஸ் மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. அதன் காரணமாக அங்கு எச்சரிக்கை நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications