பகலில் பத்திரிகையாளர்.. இரவில் ஹமாஸ் அமைப்பின் தலைவர்.. ஆதாரம் சிக்கியது! அதிர வைத்த இஸ்ரேல்
ஜெருசலேம்: பகலில் பத்திரிகையாளராகவும் இரவில் ஹமாஸ் அமைப்பை சேர்ந்தவராகவும் செயல்பட்ட வாஷா என்பவரை அடையாளம் கண்டுபிடித்து இருப்பதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் இந்த குற்றச்சாட்டு சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நீண்ட காலம் மோதல் நிலவி வந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திடீரென இஸ்ரேலுக்குள் நூற்றுக்கணக்கான ராக்கெட்டுகளை ஏவிய ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேலுக்குள் தரை வழியாகவும் புகுந்து தாக்குதல் நடத்தியது. இதனால் வெகுண்டெழுந்த இஸ்ரேல் ராணுவம், காசா நகருக்குள் தரைவழியாக தாக்குதலை தொடங்கியுள்ளது.

ஹமாஸ் அமைப்பினரை ஒழித்து கட்டும் வரை காசா மீதான தாக்குதல் நிறுத்தப்படாது என்று மும்முனை தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பினரின் சுரங்கப்பாதைகளையும் கண்டறிந்து அவற்றை அழிக்கும் பணிகளில் இஸ்ரேல் ஈடுபட்டு வருகிறது. இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்று வரும் இந்த சண்டையால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிர் போயுள்ளது.
அண்மையில் ஹமாஸ் அமைப்பு முன்வைத்த சண்டை நிறுத்த அறிவிப்பையும் இஸ்ரேல் ஏற்க மறுத்துவிட்டது. தொடர்ந்து இஸ்ரெல் - ஹமாஸ் இடையேயான போரானது உக்கிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்தான் இஸ்ரேல், பகலில் பத்திரிக்கையாளராகவும் இரவில் ஹமாஸ் தலைவராகவும் 32-வயதான நபர் ஒருவர் செயல்பட்டு வந்ததாக திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் லெப்டினண்ட் அவிக்கே ஆத்ரி கூறியதாவது:- கத்தார் நாட்டை சேர்ந்த முகம்மது வாஷா அல்ஜீசீரா பத்திரிகையில் செய்தியாளராக பணியாற்றி வந்தார். காசா முனையில் பத்திரிகையாளராக இருக்கும் இவரது லேப்டாப் அண்மையில் சிக்கியது. இந்த லேப்டாப்பை ஆய்வு செய்ததில் ஆயுதங்களை அவர் கையாள்வது குறித்த புகைப்படங்கள் இருந்தன.
ராக்கெட் மூலம் வெடிக்க வைக்கப்படும் குண்டுகள், ஆயுதங்களுடன் கூடிய டிரோன்கள் ஆகியவை பயன்படுத்தும் காட்சிகள் இருந்தன. இதே ஆயுதங்களை கடந்த அக்டோபர் மாதம் 7 ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்கு எதிரான போரில் பயன்படுத்தினர். இஸ்ரேல் ராணுவத்தின் உளவு அமைப்பு நடத்திய ஆய்வில், வாஷாவுக்கும் ஹமாஸ் அமைப்புக்க்கும் இடையேயான தொடர்பை உறுதி செய்யும் வகையில் உள்ளது என்று கூறியுள்ளது.
மேலும் அல்ஜசீரா நிறுவனத்தை நேரடியாக தொடர்பு படுத்தியம் இஸ்ரேல் ராணுவம் விமர்சித்துள்ளது. அல்ஜசீரா நிறுவனமோ.., கத்தார் அரசோ இதுவரை இந்த விவகாரத்தில் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. அல்ஜசீரா நிறுவனத்தை வெளிநாட்டு ஏஜெண்ட் ஆக பதிவு செய்ய வேண்டும் என்றும் ஏனெனில் இந்த செய்தி நிறுவனம் கத்தார் அரசு நிதியில் செயல்படுவதாக அமெரிக்கா கூறிவருகிறது. இதனால், அல்ஜசீரா நிறுவனம் கடுமையான அழுத்தத்தை எதிர்கொண்டுள்ள நிலையில், மேற்கூறிய சம்பவம் நடைபெற்று இருப்பது மேலும் நெருக்கடியை அல்ஜசீராவுக்கு ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications