வூஹான் வைரலாஜி மையத்தில் இருந்து கொரோனா? ஆய்வுகள் தொடரும்... உலக சுகாதார மையம் அறிவிப்பு
ஜெனீவா: கொரோனாவின் தோற்றம் குறித்துப் பரவும் எந்த தகவலும் தற்போது வரை நிராகரிக்கப்படவில்லை என்றும் விரைவில் அடுத்தகட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்றும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.
கொரோனா தோற்றம் குறித்துக் கூடுதல் தகவல்களைத் தெரிந்து கொள்ளவும் வரும் காலங்களில் இதுபோல மீண்டும் ஒரு வைரஸ் பரவல் ஏற்படுவதைத் தவிர்க்கவும் ஆய்வுகளை மேற்கொள்ளப்படும் என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்திருந்தது. இதற்காக உலக சுகாதார அமைப்பின் விலங்கு நோய்கள் பிரிவின் உயர் நிபுணர் பீட்டர் பென் எம்பரேக் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
கடந்த ஜனவரி மாதம் இந்தக் குழு சீனாவில் முக்கிய ஆய்வுகளை மேற்கொண்டன. சுமார் ஒரு மாதம் சீனாவில் தங்கியிருந்த இந்தக் குழு, வூஹான் வைராலஜி மையம், விலங்கு சந்தை எனப் பல முக்கிய இடங்களிலும் ஆய்வுகளை மேற்கொண்டனர்.

வூஹான் வைராலஜி மையம்
கொரோனாவின் தோற்றம் குறித்து பல்வேறு கருத்துகள் பரவுகின்றன. அப்படிப் பரவும் கருத்துகளில் ஒன்று, வூஹான் வைராஜி மையத்திலிருந்து தவறுதலாக இந்த கொரோனா வெளியுலகிற்கு வந்துவிட்டது என்பது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் சீனாவில் செய்தியாளர்களிடம் பேசிய பீட்டர் பென் எம்பரே, வைராலஜி மையத்திலிருந்து வைரஸ் பரவல் ஏற்பட்டிருக்கச் சாத்தியமில்லை என்று கூறினார். மேலும், வரும்காலங்களில் இது குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள நாங்கள் பரிந்துரைக்கப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

முக்கிய தகவல்கள்
இந்நிலையில், இன்று ஜெனீவாவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கூறுகையில், இக்கட்டான சூழ்நிலையில் மேற்கொள்ளப்பட்ட மிக முக்கிய முயற்சி என இந்த ஆய்வு பயணத்தைக் குறிப்பிட்டார். கொரோனா பரவ தொடங்கிய நாட்கள் குறித்து முக்கிய தகவல்களைத் தெரிந்து கொள்ள இந்த ஆய்வு உதவியதாகவும் அவர் குறிப்பிட்டார்,

ஆய்வுகள் தொடரும்
தொடர்ந்து பேசிய அவர், "கொரோனா எவ்வாறு தோன்றியது என்பது குறித்துப் பல கருத்துகள் உள்ளன. அவற்றில் சில கருத்துகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் பரவுகிறது. ஆனால், இது முற்றிலும் தவறு. கொரோனா பரவல் குறித்து இருக்கும் கருத்துகளில் எந்தவொன்றும் இதுவரை நிராகரிக்கப்படவில்லை. வரும் காலங்களில் கொரோனா தோற்றம் குறித்து அனைத்து கருத்துகள் குறித்தும் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

விரைவில் ஆய்வு முடிவுகள்
இந்த ஆய்வை தொங்கும் முன்பே, ஒரே பயணத்தில் கொரோனாவின் தோற்றம் குறித்து முழுமையாகக் கண்டறிய முடியாது என்று நாங்கள் கூறியிருந்தோம். ஆனால், இந்த ஆய்வின் மூலம் கொரோனா தோற்றம் குறித்தும் எங்களால் பல முக்கிய தகவல்களைத் தெரிந்துகொள்ள முடிந்தது. நம்மிடம் இப்போது இருக்கும் அனைத்து கேள்விகளுக்குமான பதில்களைக் கண்டறிய ஆய்வுகளைத் தொடரும்" என்றும் அவர் தெரிவித்தார். வல்லுநர் குழுவின் சீனா பயணம் குறித்து ஆய்வு சுருக்கும் இன்னும் சில நாட்களில் வெளியிடப்படும் என்றும் முழு ஆய்வுப் பணிகள் வரும் வாரங்களில் வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்,












Click it and Unblock the Notifications