"பேச்சுவார்த்தைக்கு தயார், ஆனால்.. " அதிபர் புதின் போடும் கண்டிஷன்! உக்ரைன் போரில் அடுத்து என்ன
மாஸ்கோ: உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தீவிரமடைந்து வரும் சூழலில், அதிபர் புதின் உக்ரைன் நாட்டிற்கு புதிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 12ஆவது நாளாக இன்றும் தொடர்கிறது கடந்த வியாழக்கிழமை உக்ரைன் மீது ரஷ்யா போரை ஆரம்பித்த நிலையில், ஒவ்வொரு நாளும் நிலைமை மோசமடைந்தே வருகிறது.
முதலில் இந்தப் போர் சில நாட்களில் முடிவுக்கு வரும் என்றே பலரும் கருதினர். ஆனால், ரஷ்ய ராணுவத்துடன் உக்ரைன் வீரர்கள் துணிச்சலுடன் போராடி வருவதால் போர் இன்னும் தொடர்கிறது.

உக்ரைன் போர்
இதன் காரணமாக உக்ரைனில் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்தே வருகிறது. இது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே கடந்த பிப். 27 மற்றும் மார்ச் 1 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகப் பேச்சுவார்த்தையும் நடைபெற்றது. இருப்பினும், இதில் இரு தரப்பிற்கும் இடையே எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை. இதற்கிடையே உக்ரைன் தரப்பில் அமைக்கப்பட்ட பேச்சுவார்த்தை குழுவில் ரஷ்ய உளவாளி இருப்பதாகவும் அவரை உக்ரைன் பாதுகாப்புப் படை கைது செய்ய முற்பட்ட போது, கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

குற்றச்சாட்டு
இந்தச் சூழலில் சில நாட்களுக்கு முன்பு, மரியுபோல் மற்றும் வோல்னோவாகா நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இருப்பினும், போர் நிறுத்த அறிவிப்பு வெளியானாலும் கூட இரு நகரங்களில் இருந்து பொதுமக்கள் யாரும் வெளியேறவில்லை என்றே செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்தது. ரஷ்யா தாக்குதலை நிறுத்தவில்லை என்று உக்ரைனும், மக்களை மனித கேடயமாக உக்ரைன் பிடித்து வைத்துள்ளதாக ரஷ்யாவும் மாறி மாறி குற்றஞ்சாட்டின.

மரியுபோல்
தற்போது துறைமுக நகரமான மரியுபோல் நகரில் ரஷ்யா தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது. இதனால் அங்குள்ள 2 லட்சம் மக்கள் வெளியேற முடியாத ஆபத்தான சூழலில் தள்ளப்பட்டுள்ளனர். மரியுபோல் நகரில் கடந்த ஒரு வாரமாகவே தாக்குதல் நடைபெறும் நிலையில், பெரும்பாலான மக்கள் அதிலிருந்து தப்பிக்கப் பதுங்கு குழியிலேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், உணவு, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளும் இல்லாமல் தவிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதின் எச்சரிக்கை
இந்நிலையில், உக்ரைன் சரணடையாவிட்டால் அந்நாட்டின் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்தப் போவதாக ரஷ்ய அதிபர் புதின் எச்சரித்துள்ளார். துருக்கி அதிபர் தையிப் எர்டோகனுடன் தொலைப்பேசி வழியாகப் பேசிய அதிபர் புதின், "போரை நிறுத்துவிட்டு பேச்சுவார்த்தை வழியாகத் தீர்வு காண ரஷ்யா தாயாராகவே உள்ளது. ஆனால், பேச்சுவார்த்தை மூலம் முடிவு எடுக்காமல் வேண்டுமென்றே இழுக்கலாம் என ரஷ்யா நினைத்தால் அது தோல்வியில் தான் முடியும் என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

பேச்சுவார்த்தைக்குத் தயார்
அப்பாவி மக்களை மீட்கத் தற்காலிக போர் நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளவும் கூட ரஷ்யா தயாராகவே உள்ளது. ஆனால், இதற்கு முதலில் உக்ரைன் ராணுவம் தனது ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும். ரஷ்யா ஏற்கனவே முன்வைத்துள்ள கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே இது சாத்தியமாகும்" என்று புதின் திட்டவட்டமாகத் தெரிவித்ததாக ரஷ்ய அதிபர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
Recommended Video

நிபந்தனைகள்
ரஷ்ய அதிபர் புதின் போரை ஆரம்பிக்கும் முன்பு உக்ரைனுக்கு சில நிபந்தனைகளை விதித்திருந்தார். அதாவது மேற்குலக நாடுகளின் நேட்டோ அமைப்பில் சேர்வது குறித்து உக்ரைன் ஆலோசித்து வந்த நிலையில், அதை முற்றிலுமாக கைவிட வேண்டும். நேட்டோ அமைப்பு இதற்கு மேல் எந்த நாட்டையும் உறுப்பினராகச் சேர்க்கக் கூடாது. கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் நேட்டோ படைகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை புதின் விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications