வங்க தேசத்தில் மீண்டும் பயங்கரம்.. இந்து இளைஞர் கொடூரமாக அடித்துக் கொலை! எகிறும் டென்ஷன்
டாக்கா: வங்கதேசத்தில் மேலும் ஒரு இந்து மதத்தை சேர்ந்த வாலிபர் அடித்து கொல்லப்பட்டுள்ளார். சில நாட்களுக்கு முன் தீபு சந்திர தாஸ் என்பவர் இஸ்லாமியர்களுக்கு எதிராக பிரசாரம் செய்ததாக கூறி கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட நிலையில் இன்று கிராமவாசிகளிடம் ஏமாற்றி பணம் பறித்ததாக கூறி அம்ரித் மண்டல் என்பவர் அடித்து கொல்லப்பட்டுள்ளார்.
நம் அண்டை நாடுகளில் ஒன்றான வங்கதேசத்தில் மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அங்கு மாணவர்கள் போராட்டம் பெரிய அளவில் நடந்தது. இந்த போராட்டம் வன்முறைகளாக மாறியதை அடுத்து, அந்நாட்டின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறினார்.

ஷெரீப் உஸ்மான் ஹாதி உயிரிழப்பு
அங்கிருந்து தப்பிய அவர் இந்தியாவில் ஓராண்டுக்கும் மேலாக தஞ்சம் அடைந்துள்ளார். இதன் பின்னர் வங்கதேசத்தில், நோபல் பரிசு வென்ற முகம்மது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வரும் பிப்ரவரி 12 ஆம் தேதி வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அங்கு மீண்டும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. அதாவது கடந்த ஆண்டு நடைபெற்ற ஷேக் ஹசீனா அரசுக்கு எதிரான மாணவர் போராட்டத்தை முன்னின்று நடத்தியவரான ஷெரீப் உஸ்மான் ஹாதி தற்போது தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட ஷெரீப் உஸ்மான் ஹாதியை மர்ம நபர்கள் சுட்டனர். இதில் படுகாயம் அடைந்து அவர் உயிரிழந்தார்.
இந்து வாலிபர் கொலை
அவரது கொலையை கண்டித்து அவருடைய ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதற்கிடையே, துணி ஆலையில் வேலை பார்த்து வந்த தீபு சந்திரதாஸ் என்ற இந்து வாலிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அடுத்தடுத்த சம்பவங்களால், வங்கதேசம் முழுவதும் பதற்றம் அதிகரித்துள்ளது.
கொடூரமாக அடித்து கொலை
இதனால் வங்கதேசத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. நேற்றும் தலைநகர் டாக்காவில் உள்ள மோக்பசார் பகுதியில் சிலர் கையெறி குண்டை வீசியதில் ஒருவர் உயிரிழந்தார். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து இதுகுறித்தும் விசாரணை நடந்து வருகிறது.
தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் மேலும் ஒரு இந்து மதத்தை சேர்ந்த வாலிபர் அடித்து கொல்லப்பட்டுள்ளார். ஏற்கனவே திபு சந்திரதாஸ் என்ற இந்து வாலிபர் கொல்லப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒரு இந்து வாலிபர் கொடூரமாக அடித்து கொல்லப்பட்டுள்ளார்.
போலீசார் விசாரணை
இது தொடர்பாக போலீசார் கூறுகையில், முதல் கட்ட விசாரணையில், வங்கதேசத்தின் ராஜ்பரி மாவட்டம் பாங்ஷா உபசிலாவில் வசித்து வரும் அம்ரித் மண்டல் (வயது 29) என்ற இளைஞர் கும்பலால் அடித்து கொல்லப்பட்டுள்ளார். அம்ரித் அப்பகுதியில் ஒரு குழுவின் தலைவராக இருந்ததாகவும், மக்களை மிரட்டி பணம் பறித்ததாகவும் அப்பகுதியினர் திரண்டு இவரை அடித்து கொன்றதாகவும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் வங்கதேசத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications