போரை நிறுத்துங்க.. ரஷ்யாவில் தன்னெழுச்சியாக வெடித்த மக்கள் போராட்டம்.. பலர் கைது
மாஸ்கோ: உக்ரைன் மீதான போரை கண்டித்து ரஷ்யாவில் பொதுமக்கள் போராட்டத்தை துவக்கியுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை போலீசார் கைது செய்தனர்.
உக்ரைன் மீது ரஷ்யா நேற்று போர் தொடுக்க துவங்கியது. உக்ரைன் தலைநகர் கிவ், கார்னவ் உள்பட பல நகரங்களில் வான்வழி தாக்குதலை நடத்தியது. கிழக்கு உக்ரைனில் தரைவழி தாக்குதலை தொடர்ந்தது. முதல் நாள் தாக்குதலில் 100க்கும் அதிகமானவர்கள் இறந்ததாக கூறப்படுகிறது.

இதனால் உக்ரைனும் தொடர்ச்சியாக பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யாவின் போர் விமானங்கள்,ஹெலிகாப்டர்களை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இன்று 2வது நாளாக போர் தொடர்கிறது.
இந்த போருக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன. மேலும் போரை கைவிட வேண்டும் என அவர்கள் தொடர்ந்து ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடினுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் விளாடிமிர் புடின் கேட்காமல் தொடர்ந்து ராணுவவீரர்கள் மூலம் உக்ரைனை தாக்கி வருகிறார்.
இந்நிலையில் போருக்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யாவில் போராட்டங்கள் வெடிக்க துவங்கியுள்ளன. நேற்று இரவு ரஷ்ய தலைநகர் மாஸ்கோ, செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரங்களில் உள்ள தெருக்களில் பொதுமக்கள் தன்னெழுச்சியாக வந்து போரட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது அவர்கள் உக்ரைன் மீதான போர் தேவையில்லாதது, இந்த போரை கைவிட வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை வைத்திருந்தனர்.
மேலும், ‛‛போரை உடனடியாக நிறுத்துங்கள்... போர் வேண்டாம்... உக்ரைன் நமக்கு எதிரியல்ல... இந்த போரை யாரும் விரும்பவில்லை.... யாருக்கும் இந்த போர் தேவையில்லை'' என கோஷங்கள் எழுப்பினர்.
இதுபற்றி அறிந்தவுடன் போலீசார் அங்கு வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லும்படி கூறினர். ஆனால் போராட்டக்காரர்கள் கேட்கவில்லை. இதனால் அவர்களை கைது செய்தனர். மொத்தம் 600 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications