'மன்னிப்பு கேட்டும் விடவில்லை'.. இம்ரான் கானுக்கு எதிராக கைது வாரண்ட்.. பாகிஸ்தானில் பரபரப்பு!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பெண் நீதிபதியை மிரட்டும் வகையில் பேசிய முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தானின் பிரதமராக இம்ரான் கான் இருந்தபோது நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவியது. இதனால் அந்நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவு அதிகரித்தது.
இந்த பொருளாதார நெருக்கடிக்கு இம்ரான் கான் ஆட்சியின் சரியான நிர்வாகத் திறமையின்மையே காரணம் என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டதோடு, கட்சிகள் அவருக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப்பெற்றன.
இனி மின்னல் வேகம்தான்.. ஜியோவை தொடர்ந்து ஏர்டெல்லும் 5 ஜி சேவையை தொடங்கியது.. என்ன ஸ்பீட் தெரியுமா?
இம்ரான் கான்
இதன் காரணமாக இம்ரான் கான் அரசு பெரும்பான்மையை இழந்து ஆட்சி அதிகாரத்தில் இருந்து கவிழ்ந்தது. இதையடுத்து, எதிர்க்கட்சிகள் ஒன்றுசேர்ந்து கூட்டணி அமைத்தது. இதில் புதிய கூட்டணி சார்பில் ஷெபாஸ் ஷெரீப் பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். இதனால் பிரதமராக இருந்த இம்ரான் கான் எதிர்க்கட்சி தலைவராக ஆனதால் ஆளும் ஷெபாஸ் ஷெரிப்பை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
பெண் நீதிபதிக்கு மிரட்டல்?
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய இம்ரான் கான், நீதிபதி ஒருவருக்கும் போலீஸ் உயர் அதிகாரிகள் இருவருக்கும் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து குறிப்பிட்ட நீதிபதி மற்றும் உயர் அதிகாரிகள் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் இம்ரான் கான் மீது தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனால், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் எப்போது வேண்டும் என்றாலும் கைது செய்யப்படக்கூடும் என்ற பரபரப்பு நிலவியது.
ஆபத்தானவனாக மாறுவேன்
எனினும், நீதிமன்றத்தை அணுகி இம்ரான் கான் முன் ஜாமீன் பெற்றார். இதனால், கைதில் இருந்து இம்ரான் கான் தற்காலிகமாக தப்பியிருந்தார். எனினும் அடுத்த விசாரணையின் போது, இம்ரான் கான் தான் திட்டமிட்டு அப்படி பேசவில்லை என்று கூறினார்.. ஆனால், இம்ரான் கானின் விளக்கத்தை நிராகரித்த நீதிமன்றம் குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவிட்டது. நீதிமன்ற விசாரணைக்கு ஆஜரான பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த இம்ரான் கான், என்னை மட்டும் ஜெயிலுக்கு அனுப்பினால் நான் இன்னும் ஆபத்தானவனாக மாறுவேன். நான் அதிகம் பேசப்போவது இல்லை. ஏனென்றால் எனது கருத்தை திரித்து விடுகிறார்கள் என்றார்.
கைது வாரண்ட்
தொடர்ந்து அடுத்த விசாரணையின் போது கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் தமது வழக்கறிஞருடன் நேரில் ஆஜராகி இம்ரான் கான் பேசினார். அப்போது தனது பேச்சுக்கு இம்ரான் கான் மன்னிப்பு கோருவதாக கூறினார். எனினும் அவரது விவாதத்தை ஏற்றுக்கொள்ளாத கோர்ட்டு தற்போது அவருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. இதனால் பாகிஸ்தானில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.