"சிரிய அகதிகளை ஏற்றுக் கொள்கின்றோம்”- முன்வந்துள்ள ஆஸ்திரேலியா!
முனிச்: சிரியாவில் உள்நாட்டுப் போரால் பல்லாயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக வெளியேறுகின்ற நிலையில் சிரிய சிறுவனின் மரணத்திற்குப் பின் அவர்களை ஏற்றுக் கொள்ள ஆஸ்திரேலியா முன்வந்துள்ளது.
உள்நாட்டுப்போர் நடந்து வருகிற சிரியாவில் இருந்து ஆயிரக்கணக்கானோர் ஹங்கேரிக்கு அகதிகளாக சென்றனர். அங்கிருந்து அவர்கள் ஆஸ்திரியா, ஜெர்மனி போன்ற நாடுகளுக்கு செல்ல விரும்பினர். ஆனால் அந்த நாடுகள் அவர்களை ஏற்கவிரும்பவில்லை.

இந்த நிலையில்தான் துருக்கியில் இருந்து கிரீஸ் நாட்டின் மோஸ் தீவுக்கு அகதிகள் சென்ற 2 படகுகள் கவிழ்ந்தன. இதில் 5 பச்சிளங்குழந்தைகள் பலியாகின. அதில் ஐலான் என்ற பிஞ்சுக்குழந்தையின் உடல் துருக்கியில் கரை ஒதுங்கி, அது தொடர்பான படம் ஊடகங்களில் வெளியாகி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. இந்த நிலையில், ஹங்கேரியில் தவித்துக்கொண்டிருந்த அகதிகளை ஏற்பதற்கு ஆஸ்திரியாவும், ஜெர்மனியும் முன்வந்தன. அவ்விரு நாடுகளும் அகதிகளை ஏற்பதற்கு தங்கள் எல்லைகளை திறந்து விட்டன.
இதையடுத்து ஏராளமான அகதிகள் ஆஸ்திரியாவின் வியன்னா நகருக்கு 100 க்கும் மேற்பட்ட பஸ்களில் சென்றடைந்தனர். அங்கிருந்து அவர்கள் ரயில்கள் மூலம் ஜெர்மனியின் முனிச் உள்ளிட்ட பிற நகரங்களுக்கு பயணம் ஆகின்றனர்.
ஆஸ்திரியாவில் இருந்து முனிச் நகருக்கு நேற்று அதிகாலை உள்ளூர் நேரப்படி 1.30 மணிக்கு கடைசியாக புறப்பட்ட ரயிலில் சுமார் ஆயிரம் அகதிகள் பயணம் ஆயினர்.
8 ஆயிரம் பேர் முனிச் நகருக்கு அகதிகளாக சென்று குவிவார்கள் என தகவல்கள் கூறுகின்றன. ஆஸ்திரேலியாவும் சிரியாவின் அகதிகளை ஏற்பதற்கு முன்வந்துள்ளது. ஏறத்தாழ 20 ஆயிரம் அகதிகள் அங்கு அடைக்கலம் புகுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications