பஹ்ரனைக் கலக்கிய 2.ஓ.. ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ஸ்பெஷல் ஷோ!
பஹ்ரைன்: நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் ஷங்கர் மற்றும் இசையமைப்பாளர் ஏஆர். ரகுமான் கூட்டணியில் உருவான பிரம்மாண்ட திரைப்படமான 2.0 உலகெங்கும் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. அதை வரவேற்கும் விதமாக பஹ்ரைன் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பஹ்ரைன் தமிழ் சினிமா வரலாற்றில் முதன் முறையாக முக்தா சினிமாஸ் அரங்கில் 6 திரையரங்குகளில் மொத்தமாக 920 இருக்கைகள் பஹ்ரைன் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் பதிவு செய்யப்பட்டு ரசிகர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் ரசிகர்களுக்கு ரஜினியின் புகைப்படம் பொறித்த டி-சர்ட்கள், பஹ்ரைன் ரஜினி மக்கள் மன்றம் பெயர் பொறித்த டிக்கெட்கள் வழங்கப்பட்டது. முன்னதாக குழந்தைகள் பெண்கள் பங்குபெற்ற பல்வேறு கண்கவர் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சிறப்பு அழைப்பாளராக நடிகர் "ஒரு தலை ராகம்" ரவீந்திரன் கலந்துகொண்டு கேக் வெட்டி தொடங்கி வைத்தார். பஹ்ரைன் ரஜினி மக்கள் மன்றத்தின் செயலாளர் சுரேஷ் கூறும்போது "பஹ்ரைனில் வசிக்கும் அனைத்து ரஜினி ரசிகர்கள் சார்பாக இந்த திரைப்படத்தை வரவேற்கிறோம். வெறும் கேளிக்கை மட்டுமல்லாமல் பஹ்ரைன் ரஜினி மக்கள் மன்றம் பல்வேறு பொது சேவைகளிலும் ஈடுபடுகிறோம்.
குறிப்பாக தற்போது கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம் மூலம் பல்வேறு நிவாரண பொருள்களை அனுப்பி வைத்தோம். ரஜினிகாந்த் பிறந்தநாளன்று மாபெரும் இரத்த தான முகாமிற்கு ஏற்பாடு செய்யவுள்ளோம்" என்று கூறினார்.
பாக்கியரதி வேணுகோபாலன் நிகழ்ச்சிக்கு பொறுப்பு வகித்தார். சுதீர், ரமேஷ் முத்தன், ராஜேந்திரன், வேப்பூர் செந்தில்குமார், ஷ்யாம் கிருஷ்ணா, ராம் ஜகன், பாரி வள்ளல், ரமேஷ் தண்டையார்பேட், நெல்சன், அருள் ஜகன், ஜெயராம் காந்தராஜ் அடங்கிய பஹ்ரைன் ரஜினி மக்கள் மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்கள் உடனிருந்தனர்.
தகவல்: முனைவர். பெ. கார்த்திகேயன்