மதரஸாக்களில் பெண் ஆசிரியர்களை நியமிக்க வங்கதேச அரசு அதிரடி உத்தரவு!
டாக்கா: மாணவர்களுக்கு எதிரான வன்முறையை தடுப்பதற்காக, மதரஸாக்களில் பெண் ஆசிரியர்களை நியமிக்க வங்கதேச அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
வங்கதேசத்தில் உள்ள மதரஸாவில் பயின்று வந்த 19 வயதான நஸ்ரத் ஐகான் ரஃபி என்ற இளம் பெண் தலைமை ஆசிரியர் மீது பாலியல் புகார் அளித்தார். இந்த புகார் தொடர்பாக, போலீசார் விசாரணையை துவங்கினர். இந்த நிலையில், பாலியல் புகாரை திரும்ப பெறுமாறு தலைமை ஆசிரியர் தரப்பிலிருந்து நஸ்ரத் ஐகான் ரஃபிக்கு தொடர்ந்து மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மிரட்டல்களுக்கு ரஃபி அஞ்சவில்லை.

இந்த நிலையில், ரஃபியை கொலை செய்வதற்கு அந்த ஆசிரியர் ஆட்களை ஏவி இருக்கிறார். அவர்கள் நஸ்ரத் ஐகான் ரஃபி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துவிட்டனர். இதில், 80 சதவீத தீக்காயங்களுடன் மிக மோசமான நிலையில் ரஃபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், கடந்த ஏப்ரல் 10ந் தேதி சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். இந்த விவகாரம் தொடர்பாக 17 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் வங்கதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், குற்றவாளிக்களுக்கு கடும் தண்டனை வழங்க கோரி, போராட்டங்கள் வெடித்தன. பாலியல் குற்றங்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுப்பது இல்லை என்று பெண்கள் அமைப்பினர் கடும் கொந்தளிப்பை வெளிப்படுத்தினர். பாலியல் புகாரில் வெறும் 3 சதவீதத்தினர் மட்டுமே குற்றவாளிகளாக அறிவிக்கப்படுகின்றனர் என்று கூறினர்.
இந்த நிலையில், பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனை கருத்தில்கொண்டு அரசு நிதி உதவி பெறும் மதரஸாக்களில் பெண் ஆசிரியர்களை நியமிக்க அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய கல்வி நிறுவனங்களில் மாணவிகளுக்கு பெண் ஆசிரியர்கள் மூலமாக கல்வி பயிற்றுவிக்கவும் நடவடிக்கை எடுக்க அந்நாட்டு கல்வி வாரியம் முடிவு செய்துள்ளது. மேலும், குழந்தைகள், சிறுவர், சிறுமியர் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை தவிர்ப்பதற்காக பள்ளி, கல்லூரிகளில் சிறப்பு கமிட்டி ஏற்படுத்தவும் வங்கதேச அரசு உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications