சூப்பர் சம்பவம்.. பிரதமர் மோடிக்கு நன்றி.. கனடாவில் வைக்கப்பட்ட பேனர்.. அடடே, இதுதான் காரணமா!
டோரன்டோ: கனடாவுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கி உதவிய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி என்று கனடாவில் விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளது.
உலகின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. பிரிட்டன், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா பரவலும் வைரஸ் பரவலைப் பல மடங்கு அதிகரித்துள்ளது.
தற்போதைய சூழ்நிலையில், தடுப்பூசிகள் மட்டுமே வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் ஒரே நோக்கமாகப் பார்க்கப்படுகிறது. இருப்பினும், உற்பத்தி குறைவாக உள்ளதால் பல்வேறு நாடுகளும் தங்களுக்கு தேவையான தடுப்பூசிகளைப் பெறுவதில் சிரமத்தை எதிர்கொண்டு வருகிறது.

தடுப்பூசி ஏற்றுமதி
உலகிலேயே அதிக தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் இந்தியா, கொரோனா தடுப்பூசி உற்பத்தி மற்றும் விநியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல இந்தியாவும் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசியை பல்வேறு உலக நாடுகளுக்கு அனுப்பி உதவியது. வங்கதேசம், நேபாளம் போன்ற நாடுகளுக்கு நட்பு ரீதியில் இலவசமாகவும் பிரேசில், தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு வணிக ரீதியிலும் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டன.

மோடிக்கு நன்றி
அதன்படி கனடாவிற்கும் ஐந்து லட்சம் தடுப்பூசிகள் இந்தியாவிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், கனடாவுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கி உதவிய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கனடாவில் விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. கனடாவுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கிய இந்தியாவுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி என்றும் கனடா-இந்தியா நட்பு நீண்ட காலம் வாழ்க என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்து மன்றம் கனடா என்ற அமைப்பு இந்த விளம்பரப் பலகையை வைத்துள்ளது.

கனடா
முன்னதாக, கடந்த மாதம் வணிக ரீதியில் கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்படும் நாடுகளின் பட்டியலை இந்திய வெளியுறவுத் துறை வெளியிட்டிருந்தது. முதலில் அதில் கனடாவின் பெயர் இடம் பெறவில்லை. அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, விவசாயிகள் போராட்டம் தொடர்பாகத் தெரிவித்த கருத்தின் காரணமாகவே அந்நாட்டின் பெயர் இடம் பெறவில்லை எனக் கூறப்பட்டது. இதையடுத்து, பிரதமர் மோடியுடன் ஜஸ்டின் ட்ரூடோ தொலைப்பேசி வழியே உரையாடினார். அதன் பின்னரே தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

கனடா கொரோனா பாதிப்பு
இந்தியாவிலிருந்து கொரோனா தடுப்பூசி அனுப்பி வைக்கப்பட்ட பின்னர், கனடாவில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டன. கனடாவில் தற்போது வரை 21 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 7,407 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 22 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் அங்கு உயிரிழந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications