''வாடா.. வாடா.. வாடா''.. நடு ரோட்டில் கட்டி உருண்டு சண்டை போட்ட மெகா கோடீஸ்வரர்கள்...!!!
சிட்னி: நடு ரோட்டில் குடி போதையில் குடிகாரர்கள் சண்டை போடுவதை பலரும் பார்த்திருக்கிறோம். ஆனால் இரண்டு மெகா கோடீஸ்வர்கள் சட்டையைப் பிடித்தும் சரமாரியாக அடித்தும் கட்டி உருண்டும் சண்டை போட்டதை பார்த்திருக்கிறீர்களா.. சிட்னியில் அப்படி ஒரு கட்டிப் புரண்டு காதை அத்த சண்டை நடந்தேறியுள்ளது.
சிட்னியின் போண்டி பீச் பகுதியில்தான் இந்த சண்டைக் காட்சி நடந்தேறியது. சண்டை போட்டுக் கொண்டவர்கள் பெரும் கோடீஸ்வரர்களான ஜேம்ஸ் பேக்கர் மற்றும் டேவிட் ஜின்ஜெல். இருவருமே ஒரு நேரத்தில் நெருக்கமான நண்பர்களாக இருந்தவர்கள்தான். இப்போது தெருவில் நாய்கள் அடித்துக் கொள்வதைப் போல இருவரும் சண்டை போட்டு அசிங்கப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவே இந்த சண்டையைப் பார்த்து அதிர்ந்து போயுள்ளதாம். என்ன தமாஷ் என்றால், இவர்களது சண்டையை தெருவில் போன ஒருவர் புகைப்படம் எடுத்து அதை ஏலத்தில் விட்டு காசு பார்க்கும் விஷயமாகவும் இந்த சண்டை மாறியுள்ளது.

கெர்ரி பேக்கரின் மகன்
46 வயதான ஜேம்ஸ் பேக்கரின் தந்தை கெர்ரி பேக்கர். இவர் மிகப் பெரிய டிவி அதிபர் ஆவார். நைன் தொலைக்காட்சி நிறுவனம் இவருடையதுதான். மேலும் ஆஸ்திரேலியாவின் 3வது மிகப் பெரிய பணக்காரரும் கூட.

இன்னொரு டிவி அதிபரின் மகன் ஜின்ஜெல்
அதேபோல 47 வயதான ஜின்ஜெல், இன்னொரு பிரபல டிவி நிறுவனத்தின் தலைமை அதிகாரியின் மகன் ஆவார். இவர் முன்பு ஜேம்ஸ் பேக்கர் வைத்திருந்த டிவியை தற்போது நிர்வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உயிர் நண்பர்கள்
இருவரும் அண்ணாமலை ரஜினி - சரத்பாபு மாதிரி நெருக்கமான நண்பர்களாக இருந்தவர்கள்தான். ஆனால் திடீரென இருவரும் பிளவுபட்டு ஒருவரை ஒருவர் சவால் விடும் அளவுக்கு துவேஷமாகி விட்டனர்.

பெண் விவகாரத்தால் சண்டையாம்..
இருவரும் ஜேம்ஸ் பேக்கரின் வீட்டுக்கு வெளியே நடுத் தெருவில் வைத்து திடீரென கட்டிப் புரண்டுள்ளனர். சரமாரியாக அடித்துக் கொண்டனர். இதில் பேக்கரின் பல் உடைந்து போனது. கண்ணிலும் பலத்த அடி விழுந்துள்ளது. இவர்களின் சண்டைக்குப் பெண் விவகாரம்தான் காரணம் என்கிறார்கள்.

மனைவியை விட்டு அழகியைப் பார்த்ததால்
பேக்கர் சமீபத்தில்தான் தனது 2வது மனைவி எரிக்கா பேக்ஸ்டரை விட்டுப் பிரிந்தார். மேலும் ஆஸ்திரேலிய சூப்பர் மாடல் அழகியான மிரண்டா கெர் என்பவருடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார். கெர், சமீபத்தில்தான் நிகர் ஆர்லான்டோ ப்ளூமை விட்டுப் பிரிந்தார்.

திருமணத்தை நடத்தி வைத்தவர்
பேக்கர், எரிக்காவின் திருமணத்தில் முக்கியப் பங்காற்றியவர் ஜின்ஜெல். திருமணத்தின்போது கூடவே இருந்தார். ஆனால் எரிக்காவை பேக்கர் கைவிட்டதால் கொதிப்படைந்து நண்பனுடன் சண்டைக்குப் போய் விட்டாராம்.

சுவற்றில் வைத்து தலையை மோதினார்
சண்டைக் காட்சியில் பல அதிரடியான சீன்களையும் பார்க்க முடிந்தது. அதாவது பேக்கரின் தலையைப் பிடித்து வேகமாக சுவற்றில் மோதியுள்ளார் ஜின்ஜெல். மேலும் அந்த இடத்தில் வைத்தே அவரது தாடையிலும் சரமாரியாக குத்து விட்டார்.

ஷூவைக் காணோமே... எங்க போச்சோ
இந்த சண்டையில் இருவரின் ஷூக்களும் பறந்து போய் விட்டன. கீழே கிடந்த இருவரையும் அவரவருக்குரியவர்கள் கைத் தாங்கலாக பிடித்துக் கொண்டு போனார்கள்.

குரவளையைக் கடிக்காத குறையாக
இந்த சண்டையை நேரில் பார்த்த ஒருவர் கூறுகையில், இரண்டு தெரு நாய்கள் எப்படி ஆவேசமாக அடித்துக் கொண்டு சண்டை போடுமோ அதே போல இருந்தது இவர்களின் சண்டை. இருவரும் ஒருவரை ஒருவர் குரல்வளையைப் பிடித்து நெரிக்காத குறையாக சண்டை போட்டுக் கொண்டனர்.

குடிச்சிருப்பாய்ங்களோ...
அவர்கள் சண்டை போட்டதைப் பார்த்தபோது குடிபோதையில் இருந்தவர்கள் போலத்தான் தெரிந்தது. ஆனால் குடிகாரர்களை விட படு ஆவேசமாக சண்டையிட்டுக் கொண்டனர். ஜின்ஜெல்தான், போன் செய்து பேக்கருடன் கடுமையாக போனிலேயே சண்டை போட்டாராம். அதையடுத்தே பேக்கர் அங்கு வந்தாராம். வந்ததுமே கட்டிப்புரண்டு சண்டை போட்டுள்ளனர்.

வாட்ச்மேன் சொல்லியும் கேட்கலையே...
இவர்கள் இருவரும் திடீரென அடித்துக் கொள்ள ஆரம்பித்தைதப் பார்த்ததும் அங்கிருந்த ஒரு வாட்ச்மேன் இவர்களை அமைதிப்படுத்த முயன்றுள்ளார். ஆனால் முடியவில்லை. இதையடுத்து அவர் போலீஸுக்குத் தகவல் கொடுத்தார்.

குழாயடிச் சண்டை தோற்றது போ...
இருவரின் சண்டையைப் பார்த்த இன்னொருவர் கூறுகையில் பேக்கர் காரில் வந்தார். வந்த வேகத்தில் கோபமாகப் பேசியபடி ஜின்ஜெலை நெருங்கினார். இருவரும் ஒருவரை ஒருவர் சட்டையைப் பிடித்து கடுமையாக மோதிக் கொண்டனர். பின்னர் கீழே விழுந்து புரண்டு புரண்டு சண்டையிட்டனர். பல குத்துக்கள் இருவருக்கும் சரமாரியாக விழுந்தன. யாராலும் இவர்களை விலக்கி விட முடியவில்லை என்றார்.

பல்லு எங்கப்பா.. புல்லில் தேடிய பேக்கர்
சண்டையின்போது பேக்கரின் ஒரு பல் உடைந்து விட்டது போல. இதனால் அவர் சண்டை முடிந்ததும் கீழே இருந்த புல் தரையில் தனது பல்லைத் தேடியதையும் பார்க்க முடிந்தது.

அதெல்லாம் சும்மா..நாங்க நண்பர்கள்தான்..
இவ்வளவு நடந்த பிறகும் இருவரும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் எங்களுக்குள் நடந்தது சாதாரணமான சண்டைதான். எங்களது நட்பும், உறவும் தொடருகிறது. 35 வருட கால நட்பு இது. இது மாறாது என்று இருவரும் சேர்ந்து அறிக்கை விட்டுள்ளனர்.

படத்துக்கு ஏக டிமாண்ட்
இதற்கிடையே இவர்களுக்கு இடையே நடந்த இந்த கட்டிப்புடி சண்டையை சாலையில் சென்ற ஒருவர் வளைத்து வளைத்து போட்டோவும், வீடியோவும் எடுத்து அதை பெரும் தொகைக்கு ஒரு டிவிக்கும் பத்திரிகைக்கும் விற்று காசு பார்த்து விட்டாராம்.
பணக்காரங்க சண்டை போட்டா...'போட்டோ' கூட பிசினஸ்தான் மச்சி...!












Click it and Unblock the Notifications