கருப்பு பணம் வைத்துள்ள 2 இந்திய பெண்கள் உட்பட 40 பெயர்களை வெளியிட்ட சுவிஸ்!
பெர்னே: கருப்பு பணம் வைத்துள்ள 2 இந்திய பெண்களின் பெயரை சுவிட்சர்லாந்து மத்திய வரி நிர்வாக அமைப்பு வெளியிட்டுள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த பணக்காரர்கள் ஊழல் மற்றும் வரி ஏய்ப்பு மூலம் சாம்பாதித்த பணத்தை சுவிஸ் வங்கிகளில் போட்டு வைப்பது வழக்கம்.
ஆனால் இந்தியா உட்பட பல நாடுகளின் எதிர்ப்பை அடுத்து, தங்கள் நாட்டில் சட்ட விரோதமாக கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருக்கும் சுமார் 40 பேரின் பெயர் மற்றும் பிறந்த தேதியை வெளியிட்டுள்ளது சுவிஸ் மத்திய வரி நிர்வாக அமைப்பு.

இதில் இந்தியாவை சேர்ந்த ஸ்னே லதா சாஹ்னி மற்றும் சங்கீதா சாஹ்னி என்ற இரு பெண்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. மேலும் அவர்களின் பிறந்த தேதியும் வெளியிடப்பட்டுள்ளது.
பட்டியலில் வெளியிடப்பட்டுள்ள இந்த இரண்டு இந்தியர்களும் தங்களது விபரங்களை இந்திய அரசு அதிகாரிகளிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என விரும்பும் பட்சத்தில் அவர்கள் 30 நாட்களுக்குள் பெடரல் நீதிமன்றத்தில் அப்பீல் செய்ய வேண்டும் என எப்.டி.ஏ. (Swiss Federal Tax Administration) உத்தரவிட்டுள்ளது.
இந்த மாதத்தில் மட்டும் இதுவரை 40க்கும் மேற்பட்ட இறுதிக்கட்ட நோட்டீஸ்கள் வெளியிடப்பட்டுள்ளன. எனவே, விரைவில் இன்னும் அதிகமான பெயர்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெயர்கள் வெளியிடப்பட்ட 40 பேருக்கும் அப்பீல் வாய்ப்பை சுவிஸ் அரசு அளித்துள்ளது. பெயர் வெளியிடப்பட்டவர்களில், இங்கிலாந்து, ஸ்பெயின், ரஷியா, அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாட்டினரும் அடங்குவர். ஆனால், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாட்டினரின் பெயர்களின் ‘இனிஷியல்' மற்றும் பிறந்த தேதிகள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. இதர விவரங்கள் வெளியிடப்படவில்லை.இதே போன்று, அடுத்தடுத்து பட்டியல்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications