இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்து விபத்து: 18 பேர் பலி, 44 பேர் மாயம்
ஜகர்தா: 101 பேருடன் மலேசியாவில் இருந்த வந்த படகு இந்தோனேசியாவின் பாதம் தீவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 18 பேர் பலியாகினர்.
மலேசியாவின் ஜோஹோர் மாநிலத்தில் இருந்து 98 புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் 3 சிப்பந்திகளுடன் படகு ஒன்று புதன்கிழமை இந்தோனேசியாவுக்கு வந்தது. அந்த படகு இந்தோனேசியாவின் பாதம் தீவை அடைந்தபோது கடலில் இருந்த பாறை மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 18 பேர் பலியாகினர், 38 பேர் மீட்கப்பட்டனர். மீதமுள்ள 44 பேரை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருவதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மீட்பு பணியில் ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட உள்ளதாக உள்ளூர் போலீஸ் அதிகாரி சாம் தெரிவித்துள்ளார். இந்தோனேசியாவை சேர்ந்த பலர் மலேசியாவில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் எஸ்டேட்டுகளில் வேலை செய்து வருகிறார்கள்.
அவர்கள் மலேசியாவுக்கும், இந்தோனேசியாவுக்கும் படகில் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவ்வாறு செல்லும்போது படகு விபத்து ஏற்படுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது.