போரை தற்காலிகமாக நிறுத்துங்கள்! மாணவர்களை மீட்க வேண்டும்! ரஷ்யா, உக்ரைனிடம் இந்தியா வலியுறுத்தல்
கீவ்: ‛‛உக்ரைனின் சுமி நகரில் தவித்து வரும் இந்திய மாணவர்களை மீட்க தற்காலிக போர் நிறுத்தம் அல்லது சிறப்பு ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும்'' என ரஷ்யா, உக்ரைனிடம் இந்தியா வலியுறுத்தி வருகிறது.
Recommended Video
உக்ரைன், ரஷ்யா தீவிரமாக போர் புரிந்து வருகிறது. உக்ரைனின் மரியுபோல், வோல்னோவாகா நகரங்களில் ரஷ்யா நேற்று தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்தது. இதையடுத்து பொதுமக்கள் பாதுகாப்பான இடத்துக்கு சென்றனர்.
இருப்பினும் இந்த இருநகரங்களில் மட்டுமே இந்த நடைமுறை அமலில் இருந்ததால் பிற நகரங்களில் உள்ளவர்கள் தவித்தனர். மேலும் தொடர் தாக்குதலால் இந்த தற்காலிக போர் நிறுத்தம் எந்த வகையிலும் பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்ற உதவாது என உக்ரைன் அரசு கூறி இருந்தது. மேலும் ரஷ்யாவின் இந்த நடவடிக்கை இந்தியர்களுக்கும் பெரியளவில் உதவவில்லை.

பாதுகாப்பாக மீட்க...
இந்தியா சார்பில் ஆபரேஷன் கங்கா மூலம் விமானங்களில் மாணவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். பெரும்பாலானா நகரங்களில் இருந்து மாணவர்கள் மீட்கப்பட்டு விட்டனர். சுமியில் நிலவும் பதற்றத்தால் மாணவர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சுமியில் உள்ள மாணவர்களை மீட்பதில் மத்திய அரசு அதிக கவனம் செலுத்தி வருவதாகவும், இதுதொடர்பாக ரஷ்யா, உக்ரைன் நாடுகளிடம் பேசியுள்ளதாகவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறியுள்ளார். அவர் கூறியதாவது:

விமானங்களில்
உக்ரைனில் சுமி மற்றும் பிசோச்சினைத் தவிர பிற இடங்களில் அதிகளவில் இந்தியர்கள் இல்லை. கார்கிவ் நகரில் இருந்து அனைவரும் வெளியேறி விட்டனர். கடந்த 24 மணிநேரத்தில் 15 விமானங்களில் 2900 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மொத்தம் 63 விமானங்களில் 13,300 பேர் தாயகம் திரும்பியுள்ளனர். அடுத்த 24 மணிநேரத்தில் 13 விமானங்களில் மீட்பு பணிக்கான திட்டம் உள்ளது.

தற்காலிக போர் நிறுத்தம்
ரஷ்யாவின் வடகிழக்கு பகுதியான சுமியில் இப்போது முக்கிய கவனம் செலுத்தப்படுகிறது. மாணவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து வருகிறோம். தொடர் தாக்குதல், வன்முறை போக்குவரத்து வசதி இல்லாதது மீட்பு பணியை சவாலாக்குகிறது. மேலும் அச்சுறுத்தலுக்கு அப்பாற்பட்டு அவர்களை பாதுகாப்பாக மீட்க முயற்சிக்கிறோம். மாணவர்களை மீட்பதற்கு சிறந்த வழி என்பது போர் நிறுத்தம் தான். இதுதொடர்பாக ரஷ்யா, உக்ரைனிடம் பேசியுள்ளோம். தற்காலிக போர் நிறுத்தம் அல்லது மாணவர்களை மீட்பதற்கான சிறப்பு ஏற்பாடு செய்து கொடுக்க தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்

700 பேருக்கு வாய்ப்பு
சுமியில் உள்ள மாணவர்களைள கிழக்கு, மேற்கு எல்லை வழியாக மீட்க முடியும். தற்போதைய சூழலில் போக்குவரத்து வசதியை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. சுமியில் உள்ள நல்ல விஷயம் என்னவென்றால், மாணவர்கள் அதிக கவனத்துடன் உள்ளனர். ஒரே இடத்தில் ஒன்றாக உள்ளனர். இது மீட்பு நடவடிக்கைக்கு எளிமையாக இருக்கும். மொத்தம் 700 பேர் அங்கு இருக்கலாம். போர் களத்தில் மீட்பு குழு தயாராக உள்ளனர்" என்றார்.

அரசு பின்வாங்காது
உக்ரைனுக்கான இந்திய தூதர் பார்த்தா சத்பதியும் தனது டுவிட்டர் பதிவில், ‛‛சுமியில் உள்ள மாணவர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதை உறுதி செய்வதற்கான முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இதில் இருந்து அரசு பின்வாங்காது'' என கூறியுள்ளார். உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம், "பிசோச்சினில் இருந்து அனைத்து இந்தியர்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர். இவர்கள் பயணங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது'' என கூறியுள்ளது.

ஆலோசனை
இதற்கிடையே பிரதமர் நரேந்திர மோடியும், உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்பது தொடர்பாக உயர்மட்ட குழு கூட்டத்தை கூடி அடிக்கடி ஆலோசனை நடத்தி வருகிறார். உக்ரைனில் இருந்து அண்டை நாடுகள் வழியாக இந்தியர்களை மீட்க 4 மத்திய அமைச்சர்கள் அங்கு அனுப்பப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications