புர்ஜ் கலிஃபாவின் பல ரெக்கார்டுகள் காலி.. "புர்ஜ் அஸிஸி.." துபாயில் உலகின் 2வது மிக உயரமான கட்டிடம்
துபாய்: உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிபா கட்டிடம் துபாயில் அமைந்துள்ள நிலையில், அடுத்த கட்டமாக உலகின் இரண்டாவது மிக உயரமான கட்டிடமான புர்ஜ் அஸிஸி என்ற கட்டிடமும் இப்போது துபாயில் அமைகிறது. இது என்ன தான் உலகின் இரண்டாவது மிக உயரமான கட்டிடமாக இருந்தாலும் இது பல சாதனைகளைப் படைக்க உள்ளது. அது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
ஐக்கிய அமீரக நகரங்களில் ஒன்றா துபாய் ஏற்கனவே அதன் வானளாவிய கட்டிடங்களுக்குத் தாயகமாக உள்ளது. உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபா அங்கே இருக்கும் நிலையில், இப்போது துபாய் உலகின் இரண்டாவது உயரமான கட்டிடத்தையும் வரவேற்கத் தயாராக உள்ளது.

புர்ஜ் அஸிஸி: புர்ஜ் அஸிஸி என்ற இந்த கட்டிடம் உலகின் மிக இரண்டாவது மிக உயரமான கட்டிடம் என்ற சாதனையைப் படைக்க உள்ளது. கடந்த ஜனவரி மாதம் இதன் கட்டுமான பணிகள் தொடங்கியது. இருப்பினும், உரிய ஒப்புதல்கள் கிடைக்காததால் அப்போது அதன் உயரம் அறிவிக்கப்படவில்லை. இப்போது அனைத்து ஒப்புதல்களும் கிடைத்துள்ள நிலையில், கட்டிடத்தின் உயரம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
உயரமான கட்டிடம்: இந்த கட்டிடம், 725 மீட்டர் (2,379 அடி) உயரம் கொண்டதாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்துச் சம்பந்தப்பட்ட நிறுவனம் கூறுகையில், "நாங்கல் ஆரம்பத்தில் இரண்டு திட்டங்களை வைத்திருந்தோம்.. ஒன்று ஏற்கனவே எங்களுக்கு ஒப்புதல் தரப்பட்ட 526 மீட்டர் உயரக் கட்டிடம். மற்றொன்று 725 மீட்டர் உயரக் கட்டிடத்திற்கானது. இரண்டையும் மனதில் வைத்தே கட்டுமான பணிகளைத் தொடங்கினோம். இப்போது அடித்தளம் அமைக்கும் பணிகள் நடக்கும் நிலையில், கட்டுமான பணிகளை விரைவுபடுத்த உள்ளோம்" என்றார்.
131 அடுக்கு கொண்ட இந்த புர்ஜ் அஸிஸி பல அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கொண்டதாக இருக்கும். இதில் உள்ள அனைத்துமே "ஏழு நட்சத்திர" சொகுசு ஹோட்டலாக இருக்கும். மேலும், இதில் ஏழு மாடிகளில் பிரம்மாண்ட ஷாப்பிங் மால் ஒன்றும் அமைய உள்ளது.

எங்கே: துபாயின் உலக வர்த்தக மைய மாவட்டத்தில் உள்ள ஷேக் சயீத் சாலையில் இந்த பிரம்மாண்ட கட்டிடம் அமைய உள்ளது. இங்கிருந்து சுமார் 3.5 கிமீ தூரத்தில் தான் 2,717 அடி உயரமுள்ள உலகின் மிகப் பெரிய கட்டிடமான புர்ஜ் கலீஃபா இருக்கிறது. இந்த புர்ஜ் அஸிஸி கட்டிடம் புர்ஜ் கலிஃபாவை விட வெறும் 340 அடி குறைவான உயரம் கொண்டதாக இருக்கும். தற்போது உலகின் இரண்டாவது மிக உயரமான கட்டிடம் மலேசியாவின் உயரமான மெர்டேக்கா 118 (2,227 அடி) கட்டிடத்திடம் இருக்கும் நிலையில், அதையும் தன்வசமாக்கும்.
பல ரெக்கார்டுகள் காலி: இந்த புர்ஜ் அஸிஸி என்ன தான் இரண்டாவது உயரமான கட்டிடமாக இருந்தாலும் இது பல்வேறு சாதனைகளைப் படைக்க உள்ளது. உலகின் மிக உயர்ந்த ஹோட்டல் லாபி (11வது மாடி), உலகின் மிக உயரமான இடத்தில் உள்ள ஹைட் கிளப் (126வது மாடி), உலகின் மிக உயரமான அப்சர்வேஷனல் டெக் (130வது மாடி), துபாயின் மிக உயரமான உணவகம் (122வது மாடி), மிக உயரமான இடத்தில் அமையும் ஹோட்டல் அறை (118-வது மாடி) எனப் பல சாதனைகளை இது படைக்க உள்ளது.
இந்த புர்ஜ் அஸிஸி கட்டிடத்தின் கட்டுமானம் வரும் 2028இல் நிறைவடையும். அதேநேரம் இதில் அமைய உள்ள குடியிருப்புகளின் விற்பனை பிப்ரவரி 2025இல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications