பிரேசிலில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 16 பேர் பலி: 31 பேர் படுகாயம்
சயோ பவுலா: பிரேசில் நாட்டில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 31 பேர் படுகாயம் அடைந்தனர்.
பிரேசில் நாட்டில் உள்ள மோகி தாஸ் குருசெஸ் நகரத்தில் இருந்து சயோ செபஸ்டியானோ நகருக்கு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் பள்ளி மாணவர்கள் உள்பட பலர் பயணம் செய்தனர். அப்போது ஒரு வளைவில் பேருந்தை டிரைவர் திருப்ப முயன்றார்.
திடீரென பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி பள்ளத்தில் கவிழ்ந்து பெரிய பாறையின் மீது பயங்கரமாக மோதியது. இதில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் பள்ளி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரேசில் நாட்டில் ஒவ்வொரு வருடமும் 43 ஆயிரம் பேர் சாலை விபத்தில் பலியாகி வருகின்றனர். 2002-2012-ஐ காட்டிலும் இது 24 சதவீதம் அதிகம். கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளத்தாக்கில் பஸ் உருண்டு விழுந்த விபத்தில் 54 பேர் பலியாகினர் என்பது நினைவுகூறத்தக்கது.