போரின்போது 17 தொண்டு நிறுவன ஊழியர்களை சுட்டுக்கொன்ற இலங்கை ராணுவம்: பிரான்ஸ் அம்பலம்
பாரிஸ்: இலங்கையில் உள்நாட்டு போரில் நிவாரணப்பணிக்கு சென்ற தனது ஊழியர்கள் 17 பேரை இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்றதாக பிரான்ஸ் நாட்டின் தொண்டு நிறுவனமான ஏ.சி.எப் அம்பலப்படுத்தியுள்ளது.
இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடைபெற்ற இறுதிக்கட்டப் போரில் லட்சக்கணக்கான அப்பாவி தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர்.

இந்தப் போரின்போது நிவாரணப்பணிக்காக சென்றிருந்த பிரான்ஸ் நாட்டின் ஏ.சி.எப். என்னும் பட்டினிக்கு எதிரான நடவடிக்கை அமைப்பு ஊழியர்கள் 17 பேரை சிங்கள ராணுவம் மிகக்கொடூரமான முறையில் கொன்று குவித்து இருப்பது இப்போது அம்பலத்துக்கு வந்துள்ளது.
இதுகுறித்து ‘ஏ.சி.எப்.' அமைப்பு, ‘17 மனித நேய உதவி பணியாளர்கள் இலங்கையில் படுகொலை செய்யப்பட்டதின் உண்மை வெளிப்பாடுகள்' என்ற தலைப்பில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், கூறப்பட்டுள்ளதாவது:
"மூதூரில் 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் தேதி சிங்கள ராணுவம், கடற்படை, காவல்துறையினர் மனிதப்படுகொலைகளை அரங்கேற்றினர். அதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது.
இதுவரை எங்கும் நேர்ந்திராத அளவுக்கு நடந்த மனித உரிமை மீறல் குற்றங்களில் ஒன்றாக, 17 நிவாரணப் பணியாளர்கள் படுகொலையை சொல்ல வேண்டும். அவர்கள் வரிசையாக நிற்க வைக்கப்பட்டு, பின்னர் முழங்கால் போட வைக்கப்பட்டுள்ளனர். அதன் பின்னர் ஒவ்வொருவரையும் தலையில் சுட்டு கொன்றனர்.
சுட்டுக்கொல்லப்பட்டவர்களில் 16 பேர் தமிழர்கள், ஒருவர் முஸ்லிம்.
இவர்களை கொன்றது சிங்கள அரசின் படைகள்தான். இலங்கை அரசின் அதிகாரப்பூர்வ விசாரணை முடிவுக்காக காத்திருந்தோம். ஆனால் கடைசியில், போர்க்குற்றம் புரிந்தவர்களை இலங்கை அரசு நீதியின் முன் நிறுத்தும் என்ற நம்பிக்கையை நாங்கள் இழந்து விட்டோம்.
சர்வதேச அளவில் சுதந்திரமான விசாரணை நடத்தித்தான், இலங்கை மனித உரிமை மீறல் குற்றவாளிகளை குற்றவாளிக்கூண்டில் நிறுத்த முடியும்" என்று கூறப்பட்டுள்ளது.
ஏ.சி.எப். செயல் இயக்குனர் மைக் பென்ரோஸ் இது தொடர்பாக கூறுகையில், "ஒவ்வொரு நாளும், நாங்களும் எங்களைப் போன்ற மனிதநேய அமைப்புகளும் போர்ப் பிரதேசங்களில் பணியாற்றினோம். மனிதநேய உதவிகளை செய்த பணியாளர்களை மதிக்காதவர்களை நீதியின் முன் கொண்டு வந்து நிறுத்த வேண்டும். இந்தக் குற்றங்களை செய்தவர்களை தண்டிக்காமல் விடக்கூடாது" என்றும் கூறியுள்ளார்.
இறுதிக்கட்டப் போரின் போது நடந்த போர்க்குற்றங்கள் குறித்து இலங்கை அரசின் மீது சர்வதேச அளவில் விசாரணை நடத்த வேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளன. இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் இதில் தீவிரமாக உள்ளார். தற்போது பிரான்ஸ் நாடும் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications