சார்லி ஹெப்டோ வழக்கை விசாரித்த போலீஸ் உயர் அதிகாரி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
பாரீஸ்: சார்லி ஹெப்டோ பத்திரிக்கை அலுவலக தாக்குதல் பற்றி விசாரணை நடத்தி வந்த போலீஸ் உயர் அதிகாரி தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அதுவும் தாக்குதல் நடந்த சில மணிநேரங்களில் அவர் தற்கொலை செய்துள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள சார்லி ஹெப்டோ வார பத்திரிக்கை அலுவலகத்திற்குள் கடந்த புதன்கிழமை புகுந்த 2 தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 12 பேர் பலியாகினர். இந்த சம்பவம் பற்றி ஹெல்ரிக் ப்ரெடோ(45) என்ற போலீஸ் உயர் அதிகாரி விசாரணை நடத்தினார். அவர் தாக்குதல் நடந்த சில மணிநேரத்தில் அதாவது கடந்த புதன்கிழமை இரவு 1 மணிக்கு தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அவர் சார்லி ஹெப்டோ தாக்குதலில் பலியான ஒருவரின் குடும்பத்தாரை சந்தித்து பேசியுள்ளார். ஹெல்ரிக் 1997ம் ஆண்டு போலீஸ் அதிகாரியாக தனது பணியை துவங்கினார். அவர் துவக்கத்தில் வெர்சைல்ஸில் பணிபுரிந்துள்ளார். பின்னர் தனது சொந்த ஊரான லிமோக்ஸுக்கு மாற்றலாகி வந்துள்ளார். 2012ம் ஆண்டு அவர் அப்பகுதியின் துணை டைரக்டராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
ஹெல்ரிக் திருமணம் செய்துகொள்ளவில்லை. அவருக்கு குழந்தைகளும் இல்லை. அவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சார்லி ஹெப்டோ அலுவலகத்தில் தாக்குதல் நடத்திய குவாச்சி சகோதரர்கள் போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications